உள்ளூர் செய்திகள்

"ஐந்து வித மாத்திரைகளாலும் அடங்கலையே ரத்தக்கொதிப்பு

எனது வயது 62. கடந்த 6 மாதங்களாக இ.சி.ஜி.,யில் A.F வந்துள்ளது. இதற்காக, நான் Amiodarone 200மி.கி., மாத்திரை எடுத்து வருகிறேன். இதைத் தொடர்ந்து எடுக்கலாமா? எஸ். கந்தசாமி, கோவைA.F என்பது Atrial Fibrillation என்பதன் சுருக்கம். இதில், இதயத்தின் மேல் இரண்டு பாகங்களான Atrial வேகமாக, கட்டுப்பாடு இன்றி துடிப்பதாக பொருள். இதில், நாடித்துடிப்பு ஒழுங்கீனமாக இருக்கும். இது வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. வால்வுகளில் கோளாறு, ரத்தக்கொதிப்பு, தசை கோளாறு, தைராய்டு கோளாறு, ரத்த ஓட்டத்தில் கோளாறு முக்கியமானது.இதில் முக்கிய பிரச்னை என்னவென்றால், ஏ.எப்., உள்ளவர்களுக்கு இதயத்தில் இருந்து ரத்தக்கட்டிகள் மூளைக்குச் சென்று, பக்கவாதம் வர வாய்ப்பு உள்ளது. உடனே மருந்து கொடுத்து இதய மின்னோட்டத்தை சரிசெய்வது அவசியம். அமியோடோரான் மாத்திரை என்பது இதய மின்னோட்டத்தை சரிசெய்ய தரக்கூடிய மாத்திரை. இதில், பக்கவிளைவுகள் அதிகம் உண்டு. இந்த மாத்திரை எடுப்பவர்கள், அவசியம், கல்லீரல், கண்கள், நுரையீரல், தைராய்டு கோளாறு உட்பட சில பரிசோதனைகளை அவ்வப்போது செய்து கொண்டு இருக்க வேண்டும். தற்போது, இதற்கு E.P., Studies என்ற முறையில், இதயத்துக்குள் ஒரு கதீட்டரை செலுத்தி, முழுவதுமாக சரிசெய்ய முடியும். அதன் பிறகு மாத்திரையை முழுவதுமாக நிறுத்திவிடலாம்.எனது வயது 55. ரத்தக் கொதிப்புக்கு ஐந்துவித மாத்திரைகளை எடுத்து வருகிறேன். இன்னும், ரத்தக்கொதிப்பு கட்டுப்பாட்டில் இல்லை. நான் என்ன செய்வது? - சி. சந்திரபாபு, மதுரைரத்தக் கொதிப்பு என்பது ரத்தக் குழாயில் 140/ 90 என்ற அளவுக்கு மேல் இருந்தால், அது, ரத்தஅழுத்தம் என்று பொருள். இதற்கு உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். அப்படியே விட்டுவிட்டால் மிகப்பெரிய பாதிப்பை உண்டுபண்ணும். குறிப்பாக மூளை, கண்கள், இதயம், சிறுநீரகம் பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளன. ஐந்து மாத்திரைகளை எடுத்தும் ரத்தஅழுத்தம் கட்டுப்பாட்டில் இல்லையென்றால், இந்த மாத்திரைகளை மாற்றி அமைத்தால் சரியாக வாய்ப்புள்ளது. இதுதவிர, தற்போது கட்டுப்பாட்டில் இல்லாத ரத்தக் கொதிப்பையும் சரிசெய்யும் மருந்துகள் வந்து விட்டன. மேலும், தற்போது அதிநவீன சிகிச்சையாக, R.D.N. சிகிச்சை முறையும் வந்துவிட்டது. இது Renal Denervation என்பதன் சுருக்கம். இதில், ஒரு கதீட்டர் மூலம் சிறுநீரகம் செல்லும் ரத்தக் குழாயில் உள்ள நரம்புகளில் கரன்ட் செலுத்தி, ரத்தக்கொதிப்பை கட்டுப்பாட்டில் கொண்டு வர இயலும். இது, இதய மருத்துவத்தையே மாற்றி அமைக்கும் புதிய கண்டு பிடிப்பாகும். இன்னும், இரண்டு மாதங்களில் இது இந்தியாவில் செயல்படுத்தப்பட உள்ளது.எனக்கு கடந்த 3 வாரங்களாக, அவ்வப்போது தலையைச் சுற்றிக்கொண்டு மயக்கம் வருவதுபோல உள்ளது. இது இதய வியாதியாக இருக்குமா? - எம்.நடராஜன், ராஜபாளையம்தலையைச் சுற்றி மயக்கமாக வருவதற்கு, இதய வியாதியும் ஒரு காரணமாக இருக்கலாம். குறிப்பாக, இதய மின்னோட்டத்தில் மாறுதல், வால்வுகளில் கோளாறு, ஹார்ட் பெயிலியர், நாடித்துடிப்பு குறைவது, இதயத்துக்குள் கட்டிகள் முக்கிய காரணங்களாகும். உங்களுக்கு அவசியம், இ.சி.ஜி., எக்கோ பரிசோதனைகள் தேவைப்படும். இதன் முடிவைப் பொறுத்து சிகிச்சை அமையும்.பரிசோதனையின் முடிவுகள் அனைத்தும் நார்மல் என்றாலும், இப்பிரச்னை தொடர்ந்தால், அவசியம் நீங்கள் நரம்பியல் நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம். எனக்கு பேஸ்மேக்கர் பொருத்தி 4 ஆண்டுகளாகிறது. எந்த தொந்தரவும் இல்லை. எனக்கு செக்கப் தேவையா? - பி. வெங்கடேசன், திண்டுக்கல்பேஸ்மேக்கர் பொருத்தியவர்கள், ஆண்டுக்கு ஒருமுறை தங்கள் இதய நிபுணரை சந்தித்து முழுபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பேஸ்மேக்கர் செக்கப், ரத்தம், சிறுநீர், மார்பக எக்ஸ்ரே பரிசோதனைகள் அனைத்தும் செய்யப்படும். இவற்றின் முடிவுகளைப் பொறுத்து உங்கள் டாக்டர் தேவையான மாற்றங்களை செய்வார்.டாக்டர் சி.விவேக்போஸ்,மதுரை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !