உள்ளூர் செய்திகள்

சுவாசப்பயிற்சி அன்றாடம் அவசியம்

'மூச்சுப்பயிற்சிகளை தொடர்ந்து அன்றாடம் மேற்கொள்வதால், எளிதாக சுவாச நோய்களில் இருந்து விடுபடலாம். துாய்மையாக இருப்பதும் மூச்சுப்பயிற்சியுமே நம்மை பாதுகாக்கும்' என, டாக்டர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.கோவை அரசு மருத்துவமனை நுரையீரல் மற்றும் காசநோய் சிறப்பு மருத்துவர் வாணி கூறியதாவது:தற்போது கொரோனா தொற்று பரவும் வேகம் அதிகமாக உள்ளது. தொடர் மழையும் குளிர்ந்த சீதோஷ்ண நிலையும் தொற்றுகளை மேலும் பரப்பும். அதனால், நாம் முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம். டெங்கு, ப்ளூ, வயிற்றுப்போக்கு, ஆஸ்துமா, நிமோனியா ஆகிய நோய்களும் ஏற்படலாம்.ஒவ்வொருவருக்கும் தன்சுத்தம் முக்கியம்; கை, கால் கழுவுதல் குளித்தல், அணிந்துள்ள ஆடைகளை அன்றாடம் அப்புறப்படுத்தி துாய ஆடைகளை அணிதல் அவசியம். குளிர்ந்த நீரையோ குளிர்பானங்களையோ அருந்தாமல், வெதுவெதுப்பான உணவுகளையும் பானங்களையும் பருக வேண்டும்.கொதிக்க வைத்த தண்ணீரை குடிக்க வேண்டும். மிளகு, கொத்துமல்லி, ஜீரகம், தக்காளி ரசம் பருகுவதும், வெஜிட்டபிள் சூப் அடிக்கடி குடிப்பதும் நல்லது. சளி, காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். சுயமருத்துவம் செய்வது தவறு, காய்ச்சல் என்று தெரிந்தும் சிகிச்சைக்கு நாட்களை நகர்த்துவதும் மிகப்பெரிய தவறு. நாள்பட்ட நோய்க்கு சிகிச்சையளித்து நோயாளியை காப்பாற்றுவது சவாலான விஷயம்.பலுான் ஊதும் பயிற்சி மேற்கொள்வதும், பிராணாயாமம், கபாலபாதி, பஸ்திரிகா போன்ற மூச்சுப்பயிற்சிகளை, அன்றாடம் மேற்கொள்வதால் எளிதாக சுவாச நோய்களில் இருந்து விடுபடலாம். துாய்மையாக இருப்பதும் மூச்சுப்பயிற்சியுமே நம்மை பாதுகாக்கும். இவ்வாறு, டாக்டர் வாணி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்