டாக்டரை கேளுங்கள்...
மலர்விழி, மதுரை: கொரோனா தொற்று காலத்தில் நுரையீரல் பாதிப்பால் பலர் இறந்தனர். தொற்று முதலில் நுரையீரலை பாதிப்பது ஏன். எப்படி தவிர்ப்பது?கொரோனா வைரஸ் இருமல், சளி மூலம் காற்றினுள் கலந்து, அருகில் இருப்பவர்கள் அக்காற்றினை சுவாசிப்பதால் மூக்கு, வாய் மூலம் நுரையிரலுக்குள் கிருமி சென்று நிமோனியாவை ஏற்படுத்தியது. கொரோனா கிருமி நுரையீரலையும் இதயத்தையும் இணைக்கும் குழாயில் ரத்தக்கட்டி போன்ற பல பாதிப்புகளை ஏற்படுத்தி சிலருக்கு மரணம் வரை ஏற்படுத்தியுள்ளது. காற்றில் பரவ கூடிய கிருமிகளான வைரஸ், பாக்டீரியா, பூஞ்சையானது மூக்கு, வாய் வழியாக நுரையீரலுக்குள் சென்று நுரையீரல் நிமோனியாவை ஏற்படுத்தும்.எடுத்துக்காட்டுக்கு 'மைக்கோ பாக்டீரியா டியூபர்குலோசிஸ்' பாக்டீரியா கொரோனா போல் காற்றில் பரவி அக்காற்றை சுவாசிக்கும் நபருக்கு நுரையீரல் காசநோய் உண்டாக்குகிறது. காற்றினால் பரவும் அனைத்து கிருமிகளும் நுரையீரலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. அதிக கூட்டமான இடங்களுக்குச் செல்லும் போது எப்போதும் முகக்கவசம் அணிவது நல்லது.- டாக்டர் பி.பிரேம் ஆனந்த், நுரையீரல் நோய் சிறப்பு நிபுணர், மதுரைஎஸ்.மோனிகா, பெரியகுளம்: எனது தங்கை மகள் கல்லுாரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அவரது தோழிகளுடன் இணைந்து கர்ப்பவாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்த உள்ளதாக தெரிவிக் கிறார். தடுப்பூசி செலுத்த அனுமதிக்கலாமா?தடுப்பூசி செலுத்துவது நல்லது. வருமுன் காக்க 9 வயது முதல் 26 வயது வரை பெண்கள் கர்ப்பவாய் புற்றுநோய் தடுப்பூசியினை செலுத்தலாம். இதனை இரண்டு அல்லது மூன்று தவணைகளாக செலுத்த வேண்டும். இதனால் புற்றுநோய் பரப்பும் 'ஹூமன் பாப்பிலோமா வைரஸ்' கிருமி தடைபடும். இந்த ஊசி செலுத்துவதினால் கர்ப்பவாய் புற்றுநோய் மட்டுமல்லாமல் தொண்டை புற்றுநோய், ஆசனவாய் புற்றுநோய் வராமல் தடுக்கப்படும்.- டாக்டர் பாரதி, புற்றுநோய் சிகிச்சை நிபுணர், மாவட்ட அரசு மருத்துவமனை, பெரியகுளம்.ராமர், ராஜபாளையம்: எனக்கு வயது 50, இடது தோள் பட்டையில் வலி தொடங்கி, முதுகு வரை பரவி இதய வலி அதிகமானது. முதல் கட்டமாக ரத்தக் குழாயில் அடைப்பு என தெரிந்தது. 'ஸ்டென்ட்', 'பைபாஸ் சர்ஜரி எது தீர்வாக இருக்கும்?எந்த மாதிரி பரிசோதனை செய்தீர்கள் என தெரியவில்லை. இருப்பினும் இப்பிரச்னைக்கு முதலில் இ.சி.ஜி., சோதனை. அதன்பின் எக்கோ கார்டியோகிராம் எடுக்க வேண்டும். இதில் அறிகுறிகள் தெரிந்தால் கொரனரி ஆஞ்சியோகிராம் எடுத்து ரத்தக்குழாயில் அடைப்பின் தன்மை குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். இது எவ்வளவு சதவீதம், எத்தனை குழாய்களில், எந்தெந்த இடங்களில் அடைப்பு என்பதை தெரிந்து கொண்டு வேறு நோய்கள், உடல் தாங்கு திறன் பொறுத்து 'ஸ்டென்ட்', 'பைபாஸ் சர்ஜரி எது தீர்வாக இருக்கும் என்பதை தீர்மானிக்க முடியும்.- டாக்டர் ஞானகுரு, இதய நோய் சிகிச்சை நிபுணர், ராஜபாளையம்.