டாக்டரைக் கேளுங்கள்
மதுமிதா, மதுரை: தங்கபஸ்பம் என்பது என்ன, எங்கு கிடைக்கும்?தங்க பஸ்பம் (தங்கபற்பம்) என்பது சித்த மருந்து, ஆயுர்வேதத்தில் இதனை சொர்ண பஸ்பம் என்பர். தங்கத்தில் உள்ள மருத்துவ குணமுடைய உலோக மூலக்கூறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஆண்மையைப் பெருக்கி உடலுக்கு வலுவை உண்டாக்கும் தன்மை உடையது. தங்க பஸ்பம் சேர்ந்த பூர்ண சந்திரோதயம் என்ற மருந்து கொரோனா பெருந்தொற்று காலத்தில் அந்நோயை கட்டுப்படுத்தும் மருந்தாக பயன்பட்டது. தேவைப்பட்டால் மட்டும் சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி தங்கப்பஸ்பத்தை மருந்தாக பயன்படுத்தலாம்.தங்கப்பற்பம் என்பது அணிகலனாக பயன்படுத்தும் சுத்தமான தங்கத்தை ராவி பொடியாக்கி மூலிகை சாறு விட்டு அரைத்து தங்கத்தின் உலோகத் தன்மை நீக்கப்படும். பின் வில்லைகளாக ஒரு மண்சட்டியில் காற்று புகாமல் மூடி குறிப்பிட்ட வறட்டியில் புடம் போட்டு எடுக்கும் போது உலோக தங்கம் சாம்பலாகி நிற்கும். இந்த நுண்ணிய சாம்பல், நீரில் கரையக்கூடிய தன்மை உடையது. சித்த மருத்துவர்கள் அனுபவத்தின் அடிப்படையில் கடுமையான முயற்சி செய்து தயாரிக்கின்றனர். இதனை மருத்துவ ஆலோசனைப்படி சரியான முறையில் உட்கொள்ள ஆரோக்கியம் மேம்படும் என்பது சித்தர்கள் வாக்கு. இம்காப்ஸ் எனப்படும் அரசு சார்ந்த இந்திய மருத்துவர்கள் கூட்டுறவு பண்டகசாலையில் தங்க பஸ்பம் கிடைக்கிறது. தங்கப் பஸ்பத்தால் செய்யப்படும் பூர்ண சந்திரோதய செந்துாரம் என்ற மருந்தும் கிடைக்கிறது.டாக்டர் ஜெ. ஜெயவெங்கடேஷ், சித்த மருத்துவ நிபுணர், மதுரை.பொ.கபிலன், காந்திகிராமம்: இரவு நேரங்களில் ஒரு வயது குழந்தைக்கு ஏற்படும் காய்ச்சலுக்கு என்ன முதலுதவி கொடுக்கலாம்?காய்ச்சல் ஒரு நோய் அல்ல; அறிகுறி மட்டுமே. அச்சப்பட தேவையில்லை. மிதமான காய்ச்சலால் தீங்கு ஏற்பட வாய்ப்பு குறைவு. இரவு நேரத்தில் உடல் வெப்பம் அதிகரித்தால் துாய ஈரத்துணியால் உடலை துடைத்து வெப்பத்தை தணிக்கலாம். அவசர கால, இரவு நேர, மருத்துவ வசதி கிடைக்காத சூழலில் பாராசிட்டமால் மருந்து எடுத்து கொள்ளலாம். 6 மணிநேர இடைவெளியில் 10 முதல் 15 மில்லி கிராம் கொடுக்கலாம். இது முதலுதவி மட்டுமே. இருப்பினும் அடுத்த நாள் காலையில் டாக்டரிடம் நேரில் குழந்தையை அழைத்து செல்வது அவசியம். காய்ச்சலுக்கான காரணத்தை அறிந்து டாக்டர் அதற்கேற்ப மருத்துவ ஆலோசனை வழங்குவார்.- டாக்டர் கா.சாந்தபெரூபா, மகப்பேறு சிறப்பு மருத்துவர், சின்னாளபட்டி.ராஜேஷ், தேனி: எனது 13 வயது மகனுக்கு சில நாட்களாக அடிக்கடி கண் வீக்கம் ஏற்படுகிறது. கண்களும் சிவப்பாக மாறுகிறது. இது எதனால் ஏற்படுகிறது?தற்போது கோடை காலம் என்பதால் உடல் சூடு அதிகரித்து வெப்பநிலை உயரும். இதனால் சிலருக்கு கண் அரிப்பு ஏற்படும். இதனால் கண் வீக்கம் ஏற்பட்டு சிவப்பு நிறமாகும். குளிர்ந்த நீரில் முகத்தை அடிக்கடி கழுவ வேண்டும். அப்படி செய்தும் 3 நாட்களை கடந்து பிரச்னை நீடித்தால் டாக்டரை சந்திக்கவும். வெயிலில் செல்வோர் 'கூலிங் கிளாஸ்' அணிந்து கொண்டால் கண் பாதிப்பு ஏற்படாது. அதிக வெப்பத்தால் புற ஊதா கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படலாம். அதில் இருந்து தப்பிக்க பகலில் வெளியே செல்வது, வெயிலில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும். நீண்ட நேரம் அலைபேசி பார்த்தாலும் கண் பிரச்னை ஏற்படலாம்.டாக்டர் கணபதி ராஜேஷ், கண் மருத்துவர், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, தேனி.கீர்த்திகா, ராமநாதபுரம்: கோடைக் காலத்தில் உடலில் நீர்சத்து குறையாமல் எப்படி பார்த்துக் கொள்வது. குளிர்ந்த நீர் குடிப்பதால் உடல்நலம் பாதிக்கப்படுமா?உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க வைட்டமின் 'சி' உள்ள பழங்களை எடுத்துக் கொள்ளலாம். எலுமிச்சை, கருப்பட்டி சேர்த்து பானகம் தயார் செய்து பருகலாம். மோர், இளநீர், கம்பங்கூழ் உள்ளிட்டவை உடலில் குளிர்ச்சியை தக்க வைக்கும்.பிரிட்ஜில் இருந்து நேரடியாக குளிர்ந்த நீரை குடிப்பதால் உடல்நலனில் பாதிப்பு ஏற்படும். குளிர்ந்த நீர் செரிமானத்தை மெதுவாக்கி மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்னைகள் உருவாக்கும். அதிக வெயிலில் இருந்து வந்தவுடன் குளிர்ந்த நீரை குடிப்பதால் தொண்டை வலி, சளி, சைனஸ் உள்ளிட்டவை வரும். குளிர்ந்த நீரை வேகமாக குடிக்கும்போது தலைவலி ஏற்படலாம். அதற்கு பதிலாக மண்பானையில் உள்ள தண்ணீரை பருகினால் உடலுக்கு குளிர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் அளிக்கும். அதேபோல் பிரிட்ஜில் வைத்த எந்த உணவுப்பொருளையும் உடனே எடுத்து சாப்பிடக் கூடாது. அதில் உள்ள குளிர்தன்மை சென்ற பின் சாப்பிடுவது நல்லது. பழங்களை சாப்பிடுவதற்கு முன்பு கல் உப்பு கலந்த தண்ணீரில் கழுவிய பின் சாப்பிட வேண்டும்.நான்கு நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் குளியல் எடுத்துக் கொண்டால் உடல் சூட்டை தணிக்க முடியும்.- டாக்டர் சுஜாதா சித்த மருத்துவர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்.க.அன்புச்செல்வி, சிவகங்கை: வெயிலால் உடலில் ஏற்படும் தோல் பாதிப்பை எப்படி சரி செய்யலாம்?கோடை காலத்தில் அதிக வியர்வையினால் ஏற்படும் ஈரப்பதம் காரணமாக தோல் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது. இதனை தவிர்க்க இரண்டு முறை குளிக்க வேண்டும். குளித்த பிறகு தளர்வான பருத்தியால் ஆன ஆடைகளை அணிவது நல்லது. வெளியே செல்லும் போது சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாப்பதற்காக குடை, முழுக்கை சட்டை, சன் கிரீம் பயன்படுத்தலாம். தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். மதிய நேரத்தில் மோர், தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற உணவுகளை சேர்த்துகொள்ள வேண்டும்.டாக்டர் வித்யா, உதவி பேராசிரியர், தோல், பால்வினை நோய் பிரிவு, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கை.பாலகிருஷ்ணன் அருப்புக்கோட்டை: எனக்கு 2 ஆண்டுகளாக கோடை காலம் வருகின்ற போது எல்லாம் வயிறு வலிப்பதுடன் வயிற்றுப் பொருமல் அஜீரண கோளாறும் ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு என்ன?பெரும்பாலும் வெயில் காலங்களில் கடுமையான வெப்பம் காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் நீர்ச்சத்து மற்றும் உப்புச் சத்து அளவில் கடுமையான மாற்றம் ஏற்படுகிறது. சோடியம், பொட்டாசியம் குளோரைட் அளவு மாறுகின்ற போது வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. அத்துடன் அதிக சோர்வும் உண்டாகிறது. தினமும் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். உப்பு, சீனி கலந்த எலுமிச்சை சாற்றை பருகினால் உப்பு குறைபாட்டில் இருந்து தப்பிக்கலாம். நடுநிலையான நீர், உப்பு சேர்த்துக் கொண்டால், வயிற்றில் ஏற்படும் அஜீரண கோளாறுகளிலிருந்து விடுபடலாம். இளநீர், பழச்சாறு எடுத்துக் கொள்ளலாம். வயிற்றில் உஷ்ணம் ஏற்படாதவாறு குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.- டாக்டர் புனிதா, அரசு மருத்துவர், அருப்புக்கோட்டை