கேள்வி-பதில்:
அல்சைமர் நோயின் பாதிப்பு என்ன?மூளையில் உள்ள நரம்பு செல்களை குறைக்கிறது. குறிப்பிட்ட ஜீன் குறைபாட்டால், பரம்பரையாக இந்நோய் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஞாபகமறதி, சோர்வு, குழப்பம், பேச்சில் தடுமாற்றம், தசை இறுக்கம் போன்றவை ஏற்படும். இந்நோய், சிடி ஸ்கேன், ரத்த பரிசோதனை, எக்ஸ்-ரே மற்றும் இ.இ.ஜி., மூலம் கண்டறியப்படுகிறது.
மூலிகை மருத்துவம் : பீட்ரூட் ரத்தத்தின் ரத்தங்கள்
ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் என்னும் அயபுரதத்தின் அளவு குறைவதே ரத்தசோகை என்று அழைக்கிறோம். இயல்பாக 16 கிராம் அளவு இருக்க வேண்டிய ஹீமோகுளோபினானது 12 கிராமிற்கு கீழ் குறையும்பொழுது ரத்தசோகை தாக்கியுள்ளதாக அறிந்துகொள்ள முடிகிறது.
ஹீமோகுளோபின் ஆக்சிஜனை அனைத்து செல்களுக்கும் எடுத்துச் செல்வதில் பெரும்பங்கு வகிப்பதால் அவற்றின் குறைபாடு பல நோய்களுக்கு காரணமாக அமைகின்றது. ஒரு வகையான சோர்வு, அன்றாடப் பணிகளை செய்ய இயலாமை, நோய்வாய்ப்பட்டது போன்ற முகத்தோற்றம், கண் கீழ் இமை, நாக்கு, நகக்கண்கள், உதடுகள் உலர்ந்து வெளுத்து காணப்படுதல், நடக்கும்பொழுதும், படியேறும் பொழுதும் பெருமூச்சு வாங்குதல், கடுமையாக வேலை செய்யும்பொழுது மார்பில் வலியுண்டாதல், சில நேரங்களில் இதய செயலிழப்பு ஆகியன ரத்தசோகையினால் உண்டாகும். அது மட்டுமின்றி பசியின்மை, மலச்சிக்கல், வயிறு ஊதுதல், கல்லீரல், மண்ணீரல், இதய வீக்கம், இதயத்துடிப்பு அதிகரித்தல் ஆகியவற்றுடன் இளமையிலேயே முடி நரைத்து வழுக்கை விழுதல், ஞாபக மறதி, கை, கால்களில் மதமதப்பு, தலைவலி, காலையில் எழும்பொழுது முகவீக்கம் ஆகியன தோன்றுகின்றன.
இரும்புச்சத்து குறைவினாலும், புரதச்சத்து குறைவினாலும், ரத்தப்போக்கினாலும் மாறுபட்ட சிவப்பணுக்களின் தோற்றம் மற்றும் வடிவத்தினாலும் போலிக் அமிலம், பி12 வைட்டமின், தைராய்டு குறைபாடு, வயிற்றுப்புழுக்கள், எதிர்ப்புசக்தி குறைபாடு, எலும்பு மச்சை குறைபாடு, பரம்பரை, சிறுநீரக செயலிழப்பு, புற்றுநோய் ஆகியவற்றாலும் ரத்தசோகை ஏற்படுகின்றது. வெறும் இரும்புச்சத்து குறைபாடு மட்டுமே ரத்தசோகைக்கு காரணம் என்று இரும்புச்சத்து நிறைந்த மருந்துகளை உட்கொள்வதால் பலன் ஏற்படுவதில்லை. ஆகவே ரத்தசோகைக்கு காரணமான பிற காரணிகளையும் கண்டறிந்து, சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
அயச்சத்து நிறைந்த பேரீட்சை, மாதுளை, கொய்யா போன்ற பழங்கள், கறிவேப்பிலை, கொத்துமல்லி, புதினா, முருங்கைக்கீரை, மஞ்சள் கரிசாலை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி, அகத்தி போன்ற கீரைகள், பயோபிளேவனாய்டுகள் நிறைந்த நாவல், கிஸ்மிஸ் பழம், வயிற்றுப்புழுக்களை நீக்கும் வெந்தயம், சுண்டைக்காய், பாகல் பிஞ்சு போன்றவை பீட்டா கரோட்டின்கள் மற்றும் நிறமிகள் நிறைந்த காரட், பீட்ரூட் போன்ற கிழங்குகள், பல்வேறு வைட்டமின்கள் மற்றும் ஆண்டி ஆக்சிடண்டுகள் நிறைந்த முளைவிட்ட தானியங்கள், பி12 வைட்டமின் நிறைந்த மண்ணீரல் ஆகியவற்றை ரத்தத்தின் ரத்தங்கள் என கூறலாம்.
ரத்தசோகை காரணத்தை அறிந்து, உணவில் அதன் மூலப்பொருட்களை உட்கொண்டால் ரத்தசோகை நீங்கும். ரத்தசோகைக்கு காரணமான பல்வேறு வகையான காரணங்களை சீர்செய்து, ரத்த அணுக்களை விருத்திசெய்யும் மருந்தாகும் உணவுப் பொருள்தான் பீட்ரூட். பீட்டா வல்காரிஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட சினோபோடியேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த கிழங்குச் செடிகள் விவசாயப் பயிராக வளர்க்கப்படுகின்றன.
இவற்றிலுள்ள ஆன்தோசையனின், பீட்டாசையனின் ஆகிய நிறமிகள் சிவப்பணுக்களுக்கு நிறத்தைத் தருகின்றன. சிலிக்கா, போரான், சோடியம், பொட்டாசியம், கால்சியம், அயோடின், காப்பர், துத்தநாகம், மெக்னீசியம் போன்ற தனிமங்களும், ஏ, பி, சி வைட்டமின்களும் செல் அழிவை தடுத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைத் தடுக்கின்றன. பீட்ரூட் கிழங்கிலுள்ள இயற்கை அயமானது உணவுப்பாதையில் உறுத்தலையும், மலச்சிக்கலையும் உண்டாக்காமல் ஹீமோகுளோபினை அதிகரிக்கின்றன. கிழங்கிலுள்ள பீட்டைன் என்னும் பொருள் போலிக் அமில கிரகித்தலை தூண்டி, ரத்தசோகையை தடுக்கின்றது. பீட்ரூட்டை அதிகமாக உட்கொள்ளும்பொழுது பீட்டைனிலுள்ள சிவப்பு நிறமிகளால் மலமும், சிறுநீரும் இயற்கையாக சிவப்பு நிறத்துடன் வெளியேறுகிறது.
பீட்ரூட் 500 கிராம் எடுத்து, தோல் சசீவி, நன்கு கழுவி, சிறு சிறு துண்டுகளாக வெட்டி சிறிதளவு நீரில் வேகவைத்து, சூடு ஆறியபின் மைய அரைத்து, அரைகிலோ சீனியை பாகு எடுத்து அத்துடன் கலந்து அடிபிடிக்காமல் சிறுக சிறுக நெய் சேர்த்து கிண்டி, பதத்தில் எடுத்துவைத்துக் கொள்ள வேண்டும். இந்த பீட்ரூட் ஜாமைச பிரட், பன், உணவிற்கு தொட்டுக்கொள்ள அன்றாடம் பயன்படுத்தி வரலாம். பீட்ரூட்டை தோல்சீவி, நன்கு கழுவி நீர்சேர்த்து மைய அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். இத்துடன் சம அளவு சீனி மற்றும் காய்ச்சிய பால் கலந்து பீட்ரூட் ஜுஸ் செய்து, வாரம் இரண்டுமுறை அல்லது மூன்று முறை குடித்துவரலாம். இதனால் ரத்தசோகைக்கு காரணமான இரும்பு, போலிக் அமிலம், நிறமிகள் மற்றும் உற்பத்தி பற்றாக்குறை ஆகியன நீங்கி, ரத்த சிவப்பணுக்கள் விருத்தியடைந்து, ரத்தசோகை நீங்கும். சர்க்கரை நோயாளிகள் குறைந்தளவில் மருத்துவரின் ஆலோசனைப்படி இதனை உட்கொள்ளலாம்.
டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை, 98421 67567