UPDATED : மே 27, 2025 04:17 PM | ADDED : மே 27, 2025 04:15 PM
பனையைப் போல ஒரு மரம் உண்டா?அதனைப் போல பயன் தருவது வேறு உண்டா?பிரமாதமாக நடந்து முடிந்துள்ளது பனைக்கனவு திருவிழாவிழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி வட்டம் பனங்காட்டில் நடந்த பனைக்கனவு நிகழ்வில், பனை மரம் தரும் பலன்களை பாராட்டி ஒருவர் பேசிய பேச்சு இப்போதும் காதில் ரீங்காரமிடுகிறது.அவர் இயற்பெயர் வேறாக இருந்தாலும், இப்போது அவர் பனையரசன் என்றே அழைக்கப்படுகிறார்.நாகர்கோவில் பகுதியில் தன் சொந்த தோட்டத்தில் 2 ஆயிரத்து 500 பனைமரங்கள் வைத்து வாழ்க்கை நடத்திவருகிறார், தமிழமெங்கும் நண்பர்கள் ஆர்வலர்களுடன் சேர்ந்து ஒரு லட்சத்திற்கும் மேல் பனை மரக்கன்றுகளை நட்டுள்ளார்.பனை தொடர்பான எங்கு எந்த நிகழ்வு நடந்தாலும் அங்கு கலந்து கொண்டு தனது கருத்துக்களை ஆனித்தரமாக சொல்லிவருகிறார்.பனைமரத்தை நட்டால் போதும் பத்து வருடங்கள் கழித்து அது, அதன் பலன்களை தரத்துவங்கும், குறைந்தது 120 ஆண்டுகள் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் எண்பதிற்கும் மேற்பட்ட பொருட்களை மக்களுக்கு தரும், அதன் வேர் முதல் நுனி வரை எல்லாமே பயன்படுத்தக் கூடியவை, நுங்கு,பதநீர்,பனங்கிழங்கு,பனம்பழம் என்று எண்ணற்ற பொருட்களை அது தருகிறது அது ஒரு வகையில் உணவு இன்னோரு வகையில் அது மருந்து.கள் என்பது மதுவல்ல ஒரு உணவு,கள் சாப்பிட்டு இறந்தவர் ஒருவர் கூட கிடையாது இருந்தும் அதற்கு தடை.இன்று நாம் கொண்டாடும் இலக்கியங்கள் எல்லாம் ஒரு காலத்தில் பனை ஓலையில் எழுதப்பட்டவையே.நான்கு பனை இருந்தால் போதும் ஒரு மனிதன் யாரையும் எதிர்பார்க்காமல் தற்சார்பு வாழ்க்கை வாழ்ந்துவிடலாம்.ஆனால் துரதிருஷ்டவசமாக பனையும், பனைத்தொழிலாளர்களும் அழிவின் விளிம்பில் இருக்கின்றனர்,இதைக் காப்பாற்ற வேண்டும் இவர்களைப் பாதுகாக்க வேண்டும் காரணம் அவர்களுக்காக மட்டுமல்ல நமக்காகவும், நாளைய தலைமுறைக்காகவும்...-எல்.முருகராஜ்