பறவைகள் பலவிதம்
பறவைகள் பேசுமா? எல்லா உயிரினங்களும் தங்கள் இனத்துடன் தொடர்புகொள்ள ஒரு வழியை வைத்திருக்கின்றன. செய்கைகள், ஒலியெழுப்புதல், அசைவு போன்றவற்றின் மூலமாக அவை ஒன்றுடன் ஒன்று தொடர்புகொள்கின்றன. ஒலியெழுப்புதல்பறவைகள் ஒலியெழுப்புதல் அதன் தொடர்புகொள்ளும் வழிகளில் ஒன்று. இயற்கையின் மாற்றங்கள், ஏற்படப்போகும் சீற்றங்கள் ஆகியவற்றை மற்ற உயிரினங்களைப் போலவே பறவைகள் முன்கூட்டியே அறிந்துகொள்கின்றன. முன்னெச்சரிக்கையாக அவை இடம்பெயரத் தொடங்குகின்றன.எதிரிகளால் தங்களுக்கு வரும் அச்சுறுத்தல்களையும், இனப்பெருக்கக்கால அறிவிப்புகளையும், மகிழ்ச்சியாக இருக்கும் போதும், குஞ்சுகளுக்கு இரை ஊட்டும்போதும் பறவைகள் ஒலியெழுப்பி அறிவிக்கின்றன. இனிமையாகக் குரலெழுப்பிப் பாடும் பறவைகளும் உண்டு. பறவைகளின் ஒலிகளைக் கூர்ந்து கவனித்துக் கேட்டால் இதை நாம் நன்கு அறிந்துகொள்ளலாம். தொண்டையில் உள்ள 'சிரின்க்ஸ்' (Syrinx) என்ற உறுப்பு பறவைகள் ஒலியெழுப்ப உதவுகிறது. தனித்துவமான இந்த உறுப்பு பறவைகளுக்கு மட்டுமே உள்ளது. பறவைகளில் ஆண், பெண் வித்தியாசத்தை அவற்றின் ஒலியை வைத்துத் தெரிந்துகொள்ளலாம். சில பறவைகள், தோகையை விரித்து நடனமாடி ஒலி எழுப்பும். முட்டைகள்பறவை முட்டைகளை பொதுவாக இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். சில வகைப் பறவைகளின் முட்டைகள் வெண்ணிறமாகவோ, பழுப்பு நிறமுடையதாகவோ இருக்கும். புறா, ஆந்தை, மரம் கொத்தி, மீன் கொத்தி ஆகியவற்றின் முட்டைகள் இவ்வகையைச் சேர்ந்தவை.வேறு சில பறவைகளின் முட்டைகள் நீலம், பச்சை, அடர்ந்த பழுப்பு நிறம், புள்ளிகளுடனும் இருக்கும். அடைகாத்தல்பெரும்பாலான பறவைகள் முட்டைகளின் மீது அமர்ந்து அடைகாக்கின்றன. சில வகைப் பறவைகள் மட்டுமே அடைகாப்பதில்லை. சில இடங்களில் பறவைகள் அடைகாக்காவிட்டாலும், குஞ்சு பொரிக்கும் அளவுக்கு அவற்றின் வெப்பநிலையை சீராக வைத்திருக்கும். ஆஸ்திரேலியா, நியூகினி தீவுகள் ஆகிய இடங்களில் உள்ள 'ஸ்கரப் ஃபவுல்' (Scrub Fowl) எனும் ஒருவகைப் பறவை புற்களையும், இலைகளையும், சிறிய செடிகளையும், மண் துகள்களையும் ஒன்று சேர்த்து 15 அடி உயரமும், 35 அடி பரப்பளவும் உள்ள குவியலை உருவாக்குகின்றன. அந்தக் குவியலில் 3 அடி நீளம் உள்ள சிறு குழிகளை உருவாக்கி அதற்குள்ளே முட்டைகளை இடுகின்றன. அந்தக் குவியலுக்குள் கிடைக்கும் வெப்பத்தால் முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் உருவாகின்றன.வேறு பறவைகளின் கூட்டில் முட்டை இட்டுச்செல்லும் பறவைகளும் உண்டு.இறகு கோதுதல்தங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ளவும், ஈரம் அதிகம் சேராமல் இருப்பதற்காகவும் பறவைகள் தங்கள் இறகுகளைக் கோதிக்கொள்கின்றன. தங்கள் இணைப்பறவைகளின் இறகுகளையும் இவ்வாறு கோதி விடுகின்றன. இறகுகளைத் தூய்மையாக வைத்துக்கொள்வதன் மூலம் தங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்கின்றன. பறவைகளின் உடலின் பின் பகுதியில் வாலுக்கும் சற்று மேல் உள்ள பகுதியில் எண்ணெய்ச் சுரப்பி உள்ளது. இந்தச் சுரப்பியிலிருந்து எண்ணெயை அலகால் எடுத்து இறகில் தடவிக்கொள்கின்றன. இதன் மூலம் இறகுகளில் நீர் ஒட்டாமல் இருக்கிறது. உடலின் வெப்பநிலையும் பாதுகாக்கப்படுகிறது.ப.கோபாலகிருஷ்ணன்