காரணமில்லாமலா பெயர் வெச்சாங்க!
பழந்தமிழ் இலக்கியங்கள் பலவும் காரணப்பெயர்களைக் கொண்டவை. இதைப் புரிந்துகொள்வதற்கு, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.முதலில், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற பெயர்கள் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு அமைந்தவை. தொகை (பலர் எழுதியவற்றைத் தொகுத்த) நூல்கள் எட்டும் 'எட்டுத்தொகை' எனப்பட்டன. அவ்வாறன்றி தனித்தனி புலவர்கள் எழுதிய பாடல்கள் பத்தும் 'பத்துப்பாட்டு' எனப்பட்டன.அடுத்து, இந்தப் பதினெட்டு நூல்களின் பெயர்களுக்கான காரணங்களைக் காண்போம்:எட்டுத்தொகை:* நற்றிணை (நல் திணை): நல்ல, ஐந்திணை அடிப்படையிலான பாடல்களின் தொகுப்பு* குறுந்தொகை: குறுகிய (அளவில் சிறிய) பாடல்களின் தொகுப்பு (தொகை)* ஐங்குறுநூறு: குறுகிய ஐநூறு பாடல்கள்* பதிற்றுப்பத்து: பத்து மன்னர்களைப்பற்றித் தலா பத்துப் பாடல்களால் அமைந்த நூல்* பரிபாடல்: இசையோடு பாடக்கூடிய பாடல்கள் அடங்கிய நூல். இலக்கணம் இன்றி எல்லா பாவிற்கும் பொதுவானது. அகம், புறம் இரண்டும் கலந்தவை.* கலித்தொகை:கலிப்பாக்களின் தொகுப்பு* அகநானூறு:அகத்திணைப் பாடல்கள் நானூறு* புறநானூறு: புறத்திணைப் பாடல்கள் நானூறுபத்துப்பாட்டு:* திருமுருகாற்றுப்படை: முருகரைப்பற்றிப் புகழ்ந்து பக்தர்களை ஆற்றுப்படுத்துவது (வழி நடத்துவது), சிறப்புக்காகத் 'திரு' என்ற அடைமொழி பெற்றது (இந்நூலுக்குப் புலவராற்றுப்படை என்ற காரணப்பெயரும் உண்டு. அதாவது, புலவர் ஒருவர் இன்னொரு புலவரிடம் அல்லது பக்தரிடம் முருகரைப்பற்றிப் புகழ்வது)* பொருநராற்றுப்படை: போர்க்களத்தைப் பாடும் பொருநர் (பரிசில் பெற்றுச் செல்பவர்) ஒருவர், இன்னொரு பொருநரிடம் மன்னரைப் புகழ்ந்து சொல்வது* சிறுபாணாற்றுப்படை: சிறுபாண் என்னும் சீறியாழ் இசைத்துப் பாடும் பாணர் ஒருவர், இன்னொரு பாணரிடம் மன்னரைப் புகழ்ந்து கூறுவது* பெரும்பாணாற்றுப்படை: பெரும்பாண் என்னும் பேரியாழ் இசைத்துப் பாடும் பாணர் ஒருவர், இன்னொரு பாணரிடம் மன்னரைப் புகழ்வது* முல்லைப்பாட்டு: முல்லைத்திணையில் அமைந்த பாடல்* மதுரைக்காஞ்சி: மதுரையின் வளத்தைப் பாடுகின்ற காஞ்சித்திணைப் பாடல்* நெடுநல்வாடை: நீண்ட, நல்ல வாடைக்காலத்தைப் பாடுகின்ற பாடல்* குறிஞ்சிப்பாட்டு: குறிஞ்சித்திணையில் அமைந்த பாடல்* பட்டினப்பாலை: காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பைப் பாடுகிற பாலைத்திணைப் பாடல்* மலைபடுகடாம்: 'கடாம்' என்பது 'ஒலி' மலையிடத்தே உண்டாகும் ஓசை முதலியவற்றைப் பாடும் இந்நூலுக்குக் 'கூத்தராற்றுப்படை' என்ற பெயரும் உண்டு. இனி நீங்கள் வாசிக்கும் நூல்களின் பெயர்களையெல்லாம் கூர்ந்து கவனியுங்கள். அவற்றுக்கு அந்தப் பெயர் அமைய என்ன காரணமாக இருக்கும் என்று சிந்தியுங்கள்.-- என். சொக்கன்