சிறுவர் புத்தகம் - போருக்குப் போகாத வீரன்!
சிறுவர்களுடன் பேசும்போது, அவர்கள் தங்கள் கற்பனையில் உதிக்கும் விஷயங்களைக் கதைகளாகச் சொல்வதைக் காணலாம். இத்தகைய தருணங்களில் அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் படைப்பாளியை நம்மால் அடையாளம் காணமுடியும்.மேற்கத்திய நாடுகளில் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக கதை சொல்லும் நிகழ்வு உள்ளது. அப்படி மாணவர்களால் சொல்லப்படும் கதைகள், ஆசிரியர்களால் தொகுக்கப்பட்டு வெளியிடப்படுவதும் உண்டு. அமெரிக்காவைச் சேர்ந்த ஆசிரியரான இ. லூயி ஸ்மைதி போன்றோர், இதில் முன்னோடிகள். அப்படிப்பட்ட ஒரு முயற்சிதான் 'தாம்போய் கதைகள்'. வே.சுடர்ஒளி மற்றும் ஈஸ்வர சந்தானமூர்த்தி ஆகியோர் இக்கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்துள்ளனர். ஈரோட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, தமிழகப் பள்ளி மாணவர்களைக் கதை எழுதச்சொல்லி அவற்றில் சிறப்பானவற்றைப் புத்தகமாகத் தொகுத்து வெளியிட முடிவு செய்தனர். மாணவர்கள் தங்களைச் சுற்றி இருக்கும் ஒவ்வொரு பொருளையும், நிகழ்வுகளையும் எப்படிக் கவனிக்கின்றனர் என்பதை இக்கதைகளின் வழியே உணர முடிகிறது.உதாரணத்திற்கு, மிருத்திகா என்ற மாணவி 'கம...கம... பண்டிதர்' என்ற கதையில், போருக்கே போகாமல் ஒருவன் எப்படி வீரன் என்று பெயர் வாங்குகிறான் என்பதை நகைச்சுவையாகச் சொல்லி இருக்கிறார். 'அருவியில் குளித்த ஐஸ்' என்ற கதையில், ஒன்றாகக் கிளம்பும் குச்சி ஐஸ், தக்காளி, முட்டை, மிளகாய், வெங்காயம் ஆகியவை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமாகக் காணாமல் போகின்றன. அவை எப்படிக் காணாமல் போகின்றன என்பதைச் சிறார்களால் மட்டுமே யோசிக்க முடியும்.ஏழு புத்தகங்களாக வெளியிடப்பட்டுள்ள இத்தொகுப்பில், சுமார் ஐம்பது கதைகள் உள்ளன. சிறுவர்கள் தாங்கள் கேள்விப்படும் ஒரு கதையை எப்படிப் புரிந்துகொள்கிறார்கள் என்பதையும், பிறகு அதே கதையை தங்கள் பார்வையில் எப்படி வேறொரு கதையாக மாற்றுகின்றனர் என்பதையும் இந்தத் தொகுப்பை வாசிக்கும்போது அறிந்துகொள்ள முடிகிறது.தாம்போய் கதைகள் - 7 புத்தகங்கள்வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ரன்- ஜி.சரண்