உள்ளூர் செய்திகள்

சிறுவர் புத்தகம்: சட்டத்தைப் புரிந்துகொள்வோம்!

அன்றாட வாழ்வில் நாம் தினமும் சட்டம் குறித்த பல செய்திகளையும், சம்பவங்களையும் பற்றிக் கேள்விப்படுகிறோம். சட்டம் என்பது பெரியவர்களுக்கு மட்டுமானது அல்ல; எல்லோருக்குமானது தான். தினசரி வாழ்வில் நாம் சந்திக்கும் பல்வேறு விஷயங்களின் பின்னால் உள்ள அரசியல், சட்ட விஷயங்களைத் தனது பார்வையில் விவரித்து புத்தகமாக எழுதியிருக்கிறார் திவ்யாங்னா திரிவேதி (Divyangna Trivedi). இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர், தற்போது 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஓராண்டுக்கு முன், 'பிரச்னைகளின் தொகுப்பு' (The Combo of Problems) என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார். சிறு வயதிலிருந்தே பாடல்கள், கதைகள் எழுதுவதில் ஆர்வம் உடையவர். செய்தித்தாள்களை வாசித்ததில், அனைவருக்கும் சட்ட அறிவு அவசியமானது என்பதில் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. பொதுவாக, சட்டம் சார்ந்த கட்டுரைகள் சிக்கலாகவும், புரிந்துகொள்ளக் கடினமாகவும் இருப்பது இயல்பு. ஆனால், திவ்யாங்னாவின் இந்தப் புத்தகம், சட்ட நுணுக்கங்களை விரிவாகப் பேசும் அதேவேளையில், அனைவரும் வாசித்துப் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாகவும் அமைந்திருக்கிறது.போக்குவரத்து நெருக்கடி, காவலர்களின் பணிச்சுமை, தீவிரவாதத் தாக்குதல்கள், மக்களுக்கு இருக்கும் சட்ட வாய்ப்புகள் போன்றவை குறித்து இப்புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்றங்களில் குவியும் வழக்குகள் நீதி அமைப்பின்மேல் எப்படிப்பட்ட அழுத்தத்தைச் செலுத்துகின்றன என்பது பற்றியும் இந்தப் புத்தகம் சொல்கிறது.ஒரு குற்றம் நிகழ்ந்துவிட்டால், அதற்கு எப்படியெல்லாம் மதச்சாயம் பூசப்பட்டு அரசியல் ஆக்கப்படுகிறது என்று கூறும் அவர், அதன் காரணமாக வழக்கு, விசாரணை ஆகியவற்றில் ஏற்படும் இடையூறுகள் குறித்துக் கவலை தெரிவிக்கிறார். குற்றத்திற்குக் காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படும்போது, நீதி வழங்குவதில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்கள் என்னென்ன, அதற்கான தீர்வுகள் எப்படி இருக்க வேண்டும் என்று பட்டியலிடுகிறார்.இடஒதுக்கீடு (Reservation) குறித்து மக்களிடையே நிலவும் அறியாமை குறித்துக் கவலை தெரிவிக்கும் அவர், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூகநீதி எவ்வளவு அவசியம் என்பதைச் சட்டங்களின் துணையோடு விளக்கியுள்ளார். சட்டத்தின் வழியே எப்படி சமூகநீதியை உறுதிசெய்வது, ஒடுக்கப்பட்டோர் தங்களுக்கான உரிமைகளை எப்படிப் பெறுவது என்பது குறித்த கருத்துகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.சட்டம் படித்து, சர்வதேச அளவிலான வழக்குகளுக்கு ஆஜராவதைத் தனது நோக்கமாகக் கொண்டிருக்கும் திவ்யாங்னா, இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணிபுரிவதுதான் தனது வாழ்நாள் இலக்கு என்று உறுதிபடக் கூறுகிறார்.ஜி.சரண்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !