ஆமை வேகத்தில் கட்டுமானம்
கலைநயம் மிக்க ஒரு கட்டடம் கட்டி முடிக்க எவ்வளவு ஆண்டுகள் ஆகும் என்று நினைக்கிறீர்கள்?. உலக அதிசயங்கள் பட்டியலில் இருக்கும் பிரமிடுகள், தாஜ்மஹால் போன்ற கட்டடங்களைக் கட்டுவதற்கே 20 ஆண்டுகளுக்குள்தான் ஆனது என்று சொல்கிறார்கள். ஆனால் படத்தில் இருக்கும் இந்த தேவாலயம் 134 ஆண்டுகளாகக் கட்டப்பட்டு வருகிறது. 'ல சக்ராடா ஃபமீலியா' (La Sagrada Família) என்பது இதன் பெயர். ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் இது அமைந்து இருக்கிறது. பார்சிலோனா நகரத்தில், 'புனிதர் ஜோசஃப் பக்தர்கள் சங்கம்' என்ற பெயரில், இயங்கிவரும் ஒரு பக்தர்கள் சங்கம், உலகம் முழுவதும் இருக்கும் ஜோசஃப் பக்தர்களிடம், நன்கொடை வசூல் செய்து இதைக் கட்டிவருகிறது. பிரான்சிஸ்கோ டி பாவ்லா டெல் வில்லர் (Francisco de Paula del Villar) என்ற கட்டடக்கலை நிபுணர், 1882ஆம் ஆண்டில், இந்த தேவாலயத்தைக் கட்டத்தொடங்கினார். தேவாலய நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவர் ஒரே வருடத்தில் விலக, அதைக் கட்டி முடிக்கும் பொறுப்பு அந்தோனி காடி (Antoni Gaudí) என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற கட்டடக் கலை நிபுணரான காடி, கட்டடத்தின் வடிவமைப்புத் திட்டத்தைத் தாறுமாறாக மாற்றிக் கட்டத்தொடங்கினார். பத்தே வருடங்களில் கட்டிமுடித்துவிட முடியும் என்று நினைத்தார். ஆனால், அவரது கற்பனையில் உதித்த தேவாலய அமைப்பை எழுப்ப வெகு காலம் ஆகிக்கொண்டிருந்தது. 'எனது வாடிக்கையாளருக்குத் துளியும் அவசரம் இல்லை!' என்று சொல்லி தேவாலயத்தைச் செதுக்கிக்கொண்டிருந்தார், காடி. பாவம் மனிதர்! டிராம் வண்டி மோதி 1926 ஆம் ஆண்டில் உயிரிழந்தார். அவர் இறந்த காலத்தில் தேவாலயத்தின் 25 சதவிகித வேலை மட்டுமே முடிந்திருந்தது. 'எத்தனை தலைமுறைகள் ஆனாலும் பரவாயில்லை! எப்படியாவது தேவாலயத்தைக் கட்டி முடித்துவிட வேண்டும்!' என்று தேவாலய நிர்வாகம் உறுதியாக இருந்தது. காலப்போக்கில் உலகப் போர், உள்நாட்டுப் போர் என்று பல்வேறு தடங்கல்களைச் சந்தித்தாலும், தேவாலயக் கட்டுமானக் குழுவைச் சேர்ந்தவர்கள் தங்கள் முன்னோரின் முயற்சியைக் கைவிடாமல் இன்றளவிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இதைக் கட்டிமுடிக்க இன்னும் பத்து வருடங்கள் ஆகுமாம். அப்போது உலகின் மிக உயரமான தேவாலயம் என்ற பெருமையையும் அது பெறும்.