பவளப் பூஞ்சோலை
இந்தப் பூமியில் எந்த ஓர் உயிரினமும் தனித்து வாழவே முடியாது. மரம், செடி, கொடி, விலங்குகள் என்று ஒன்றை ஒன்று சார்ந்தே வாழ முடியும். இந்த உயிர்ச்சூழலைத்தான் 'பல்லுயிரியம்' என்று அறிஞர்கள் சொல்கிறார்கள். நிலத்தில் இருப்பது போலவே, கடலிலும் பல்லுயிரிய அமைப்புகள் நிறைய இருக்கின்றன. அவற்றில் பவளப்பாறைகள் மிகவும் முக்கியமான ஓர் அமைப்பு. 'பவளம்' எனப்படும் ஒரு வகை கூட்டுயிரிகள் சுரக்கும் சுண்ணாம்புப் பிணைப்புகளால், பவளப்பாறைகள் உருவாகின்றன. பார்ப்பதற்கு அழுத்தமான சுண்ணாம்புச் செடிகளின் தொகுப்பு போல இவை இருக்கும். இந்தத் தொகுப்புகளோடு, பல வகையான நுண்ணுயிரிகள் ஒட்டி வளர்ந்து பவளப்பாறைகளின் தன்மையை நிர்ணயிக்கின்றன. பவளப்பாறைகள் பல வண்ணங்களில் இருப்பதால், கண் கவரும் பூஞ்சோலை மாதிரி தெரியும். உலகில் பவளப்பாறைகளை உருவாக்கும் 800க்கும் மேற்பட்ட பவள வகைகள் இருக்கின்றன. பவளப்பாறைகள் பல மைல்கள் தூரம் பரவி வளரும். ஆஸ்திரேலியாவின் வடகிழக்குக் கடற்கரையில், 'கிரேட் பாரியர் ரீஃப்' (Great Barrier Reef) என்ற ஒரு பவளப்பாறை தொகுப்பு இருக்கிறது. இதன் நீளம் சுமார் 2,300 கிலோமீட்டர்! உலகின் மிகப்பெரிய பவளப்பாறை அமைப்பு இதுதான். இந்த அமைப்பில் 600 வகையான பவள வகைகள் இருக்கின்றன. இந்த அளவு பரப்பில் ஒரு காடு இருந்தால், அது எத்தனை வகையான உயிர்களுக்கு அரணாக இருக்கும் என்று கற்பனை செய்துகொள்ளுங்கள்! அது போலத்தான் இந்தப் பவளப்பாறைகளும் செயல்படுகின்றன. கடலின் மொத்தப் பரப்பில் 0.1 சதவீதத்துக்கும் குறைவான பகுதியில் மட்டுமே பவளப்பாறைகள் இருக்கின்றன. இருந்தாலும் 25 சதவீதத்துக்கும் மேலான கடல் வாழ் உயிரிகள் வாழ்வதற்கு ஆதாரமாகப் பவளப்பாறைகள் இருக்கின்றன.இந்தியா: இந்திய கடலோரப் பகுதியில் இருக்கும் 2,200 மீன் இனங்களில் 20 சதவீதம் பவளப்பாறைகள் இருக்கும் பகுதியில்தான் உள்ளன. உலகில் பவளப்பாறைகள் இருக்கும் 109 நாடுகளில், இந்தியா 10 ஆவது இடத்தில் இருக்கிறது.