ஹி... ஹி... வாயு!
நைட்ரஸ் ஆக்ஸைடுக்கு (Nitrous oxide) இன்னொரு பெயர்தான் சிரிப்பூட்டும் வாயு. வாசனையாகவும் நிறமற்றதாகவும் எளிதில் தீப்பற்றாததுமாக இருக்கிறது. இதைச் சுவாசிக்கும்போது சிறிய அளவிலான மயக்கமும் உற்சாக உணர்வும் ஏற்படுவதால் 'சிரிப்பூட்டும் வாயு' என்கிறார்கள். இதன் வேதியியல் வாய்ப்பாடு N2O.ஜோசப் பிரிஸ்ட்லி (Joseph Priestley) என்பவர் இதை 1772ல் கண்டுபிடித்தார். ஆனாலும் அப்போது யாரும் பயன்படுத்தவில்லை. பிறகு, சர்.ஹம்ப்ரி டேவி (Sir. Humphry Davy) நைட்ரஸ் ஆக்ஸைடின் மயக்க விளைவைப் பற்றி 1800ல் ஆய்வு செய்தார். அப்போது, அந்த வாயுவை முகர்ந்து மயக்கம் அடைந்த டேவி, தொடர்ந்த பரிசோதனையால் இந்த வாயுவைக் கண்டறிந்து புகழ் பெற்றார்.மயக்க மருந்தாகவும் வலி நிவாரணியாகவும் இருக்கிறது. அதனால், அறுவை சிகிச்சை மற்றும் பல் மருத்துவத்தில் அதிகம் பயன்படுகிறது. இந்த வாயுவைத் தயாரிக்கும்போது வெப்பநிலையை, 240 டிகிரி செல்சியஸில் சீரான அளவில் வைக்கவேண்டும். வெப்பநிலையைக் கட்டுப்படுத்தத் தவறினால் வெடித்துச் சிதறிவிடும்.சிரிப்பு வரவேண்டும் என்பதற்காக, அதிகமான நைட்ரஸ் ஆக்ஸைடை உறிஞ்சிவிடக் கூடாது. அப்படி உறிஞ்சினால் நுரையீரல் பாதிப்பு ஏற்படும்.இந்த வாயுதான் ஓசோனில் ஓட்டை விழ முக்கியக் காரணமாக இருக்கிறது. கார்பன் டை ஆக்ஸைடு உருவாக்கும் விளைவுகளைவிடப் பல மடங்கு விளைவுகளை இது உருவாக்கும். சில பாக்டீரியாக்கள்கூட இந்த வாயுவை இயல்பாக உற்பத்தி செய்கின்றன. விவசாயத்திற்குப் பயன்படுத்தும் உரங்களிலும் நைட்ரஸ் ஆக்ஸைடின் அளவு அதிகமாக இருக்கிறது.சிரிப்பை நிர்ணயிப்பது மூளை. ஒரு குழந்தை பேசத் தொடங்குவதற்கு முன்பு சிரிக்கத் தொடங்குகிறது. சராசரியாக ஒரு குழந்தை நாள் ஒன்றுக்கு 300லிருந்து 400 முறை சிரிக்கிறது. ஆனால், வளர்ந்த மனிதர்களோ 15 முதல் 20 முறைதான் சிரிக்கிறார்கள்.