உணவின் வரலாறும், வளர்ச்சியும்!
உலகில் வாழும் உயிரினங்கள் எல்லாவற்றுக்கும் பசி பொதுவானது. இது ஓர் உடல் சார்ந்த தூண்டுதல். உயிரினங்கள் அனைத்துமே தனக்குத் தேவையான உணவை ஈட்டுவதற்கு உழைக்கின்றன. உணவு வளர்ச்சி!ஆரம்ப கால புதை படிவங்கள் மூலம், நம் மூதாதையர்களின் உணவுமுறை பற்றித் தெரிந்துகொள்ள முடிகிறது. 14 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், வாழ்ந்த மூதாதையர்கள், பெரும் விலங்கான மாமூத் யானைகள், காட்டெருமை, மான் போன்றவற்றை வேட்டையாடி இருக்கின்றனர். அதனால் ஒரே இடத்தில் தங்காமல், நாடோடிகளாக பல்வேறு இடங்களுக்குச் சுற்றித் திரிந்தனர். அதையடுத்து, பெரிய விலங்குகளை வேட்டையாடுதல் குறைந்து, நிலையான இடத்தில் தங்கினர். அப்போதுதான், செடிகள், மீன்கள், மற்ற வகை சிறிய விலங்குகளை மட்டும் வேட்டையாடி உண்டனர். குறிப்பாக ஐரோப்பா, கிழக்குப் பகுதிகளில் குடில்களை அமைத்து நிலையாக மனிதர்கள் வாழத் தொடங்கி இருப்பதற்கான தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. கி.மு. 8000இல் கிழக்குப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள், பயிர்களையும், விலங்குகளையும் உணவுத் தேவைகளுக்காக வளர்க்கவும் தொடங்கியிருப்பார்கள் என்கிறார் தொல்லியல் ஆய்வாளர் வி. கார்டன் சில்டே. ஒரு தேக்கரண்டி வளர்ச்சி!விலங்குகளைப் பார்த்து, மனிதன் வேட்டையாடக் கற்றுக்கொண்டிருப்பான் என பல்வேறு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பல்வேறு புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியதில், மனிதமூளை வளர்ச்சி முக்கிய பங்காற்றி உள்ளது. உணவு மொழியிலேயே கூறவேண்டுமா?1 லட்சம் ஆண்டுகளில் ஒரு தேக்கரண்டி அளவு அதிகரித்து இருப்பதாக ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் எட்வர்டு வில்சன் கூறுகிறார். 'மனிதர்களிடம், உணவு சேகரிப்பு முறை வளர்வதற்கு மூளை வளர்ச்சியும் ஓர் காரணம்' என்றார் அவர். அகழாய்வில் முன்னோர்களின் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் ஆகியவை பற்றிய ஆதாரங்கள் குறைவாகவே உள்ளன. எனினும், அங்கு கிடைத்த தானிய எச்சங்கள், கருவிகள், மண் பாண்டங்கள் ஆகியவை இதில் உதவுகின்றன. இதன் மூலம், வேட்டையாடுதல், உணவு சேகரிப்பு பற்றியும் புரிந்துகொள்ள முடிகிறது. இந்தியாவின் தொன்மையான நாகரிகமான, சிந்து சமவெளி காலத்தில் என்ன உணவு சாப்பிட்டார்கள் என்பதை அடுத்தவாரம் பார்ப்போம்.(ருசிப்போம்)