ஓர் ஆயுள் போதாது!
'ஆர்ச்டிட்', 'லார்ஜ் கோவா ப்ளூ' ஆகிய பட்டாம்பூச்சி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 'கோரல்' என்ற பாம்பைப் பார்த்திருக்கிறீர்களா? இவையெல்லாம் தமிழகத்தில் காணக்கிடைப்பதே அபூர்வம். அத்தகைய அரிய விஷயங்களைத் தேடிக் கண்டுபிடித்து, புகைப்படங்கள் எடுத்து ஆவணப்படுத்தியவர் ராஜபாளையத்தைச் சேர்ந்த 23 வயதான் ஷரத். எப்படி இதெல்லாம் சாத்தியமாயிற்று?“சிறுவயதில் இருந்தே நான் பறவைகளை மட்டுமே ஆவணப்படுத்தி வந்தேன். ஆனால், தற்போது நிறைய பேர் இதனைச் செய்கிறார்கள். அதனால், கொஞ்சம் வித்தியாசமாகச் செய்யலாம் என்று நினைத்து, 2015ஆம் ஆண்டு முதல் தமிழகத்திலுள்ள பட்டாம்பூச்சிகளை ஆவணப்படுத்தி வருகிறேன். அடுத்த தலைமுறை வரைகூட இந்தப் பட்டாம்பூச்சிகள் இருக்குமா என்று சந்தேகமாக இருக்கிறது. அதனால் அவற்றை முறையாக ஆவணப்படுத்தி வருகிறேன். இதுவரை ராஜபாளையம் பகுதியில் மட்டும் 250 பறவைகள், 250 பட்டாம்பூச்சிகளை ஆவணப்படுத்தியுள்ளேன். அப்படித்தான் இந்த 'ஆர்ச்டிட்', 'லார்ஜ் கோவா ப்ளூ' ஆகிய பட்டாம்பூச்சிகளைக் கண்டுபிடித்தேன். இவை மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தான் காணக்கிடைக்கும் என்று சொன்னார்கள். ஆனால், அவை ராஜபாளையத்திலேயே இருப்பதை நான் உறுதிப்படுத்தினேன். அதேபோல், 'கோரல்' வகைப் பாம்பையும் கண்டுபிடித்தேன்.என்னுடைய சொந்த ஊர் ராஜபாளையம். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியிருக்கும் ஊர் என்பதால், இங்கே நிறைய பறவைகள், அணில்கள் இருக்கின்றன. ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது, பொழுதுபோக்காக பறவைகளைப் பார்க்கச் சென்றேன். நேரில் பார்த்தபோது கிடைத்த பிரமிப்பு தான், என்னை இந்தத் துறைக்கு இழுத்து வந்தது.இந்தியா முழுவதும் இருக்கும் புகழ்பெற்ற பல பூங்காகளுக்குச் சென்றுள்ளேன். வெளிநாடுகளில் இருக்கும் புகழ்பெற்ற சரணாலயங்களுக்கும் சென்று, அங்கிருக்கும் விலங்கினங்களையும் ஆவணப்படுத்தியுள்ளேன். வெளிநாடுகளுக்குச் செல்லவேண்டும் என்பதைவிட, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே கவனம் செலுத்தினால்கூடப் போதும் என்று நினைக்கிறேன். இங்கேயே அத்தனை வளங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அத்தனை உயிரினங்கள் வாழ்கின்றன. அத்தனை ஆச்சரியங்கள் காத்துக்கிடக்கின்றன. அவற்றை ஆவணப்படுத்த ஓர் ஆயுள் போதாது!”