வட இந்தியாவின் இராஜபாளையம்!
ராம்பூர் வேட்டை நாய் (Rampur hound dog)தாயகம்: இந்தியாவகை: வேட்டை நாய்உயரம்: ஆண்: 60 -75 செ.மீ. பெண்: 55 - 60 செ.மீ.எடை: 27 முதல் 30 கிலோ வரைஆயுட்காலம்: 9 முதல்12 ஆண்டுகள் வரைஇந்தியாவில் எல்லா திசைகளிலும் வேட்டை நாய்கள் பிரபலம். தமிழகத்தில் இராஜபாளையம் போல், வடமேற்கு இந்தியாவில் ராம்பூர் வேட்டை நாய் இனம் மிகவும் பிரபலம். இந்த நாய் இனம் உருவத்தில் பெரியது. இதன் தோலின் நிறம் சாம்பல்; அதேபோல், மிக அரிதாக கருப்பு நிறத்திலும் காணப்படும். சாம்பல் நிறத் தோலின் மேல் கருப்புக் கோடுகள் காணப்படும். இதனுடைய கண்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். கூர்மையான கண்பார்வை இருப்பதால், காட்டில் தூரத்தில் இருக்கும் விலங்குகளையும் எளிதில் கண்டுபிடித்துவிடும் திறனுடையது. இதனுடைய வால் நீண்டு இருக்கும். இந்த வேட்டை நாயின் உடல் நீளமாக இருக்கும். இந்த நாய், வேட்டைக்காக வளர்க்கப்பட்டது. புலி, சிங்கம், சிறுத்தை, சிறுத்தைப்புலி போன்ற விலங்குகளை வேட்டையாட அரசர்கள், ஜமீன்தார்கள் அழைத்துச் செல்வார்கள். வேலை இல்லாவிட்டால் சோம்பேறி தனத்துடன் காணப்படும். அதுவே வேலை என்று களத்தில் இறங்கிவிட்டால், இலக்கை முடித்துவிட்டுத்தான் திரும்பும். அதனாலேயே அரசர்கள், ஜமீன்தார்களுக்குப் பிடித்த நாய் இனம் இது. பல ஆண்டுகளுக்குமுன், ராம்பூர் நவாப்பாக இருந்த அகமது அலி கான் பகதூர் (1794- முதல் 1840 வரை) என்பவர்தான் இந்த இனத்தை உருவாக்கினார் என்று சொல்லப்படுகிறது. ஆப்கன் மற்றும் பிரிட்டன் வேட்டை நாய் இனங்களைக் கலப்பினம் செய்து உருவாக்கி இருக்கிறார் என்று சில புத்தகங்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்தியாவில், குஜராத், டில்லி போன்ற இடங்களில் பல அரசர்கள், ஜமீன்தார்கள் இந்த நாய் இனத்தைப் பாதுகாத்து, இனப்பெருக்கம் செய்து இருக்கிறார்கள். இதனுடைய அபார மோப்ப சக்தி, ஓடும் திறனைக் கண்டுவியந்த ஆங்கிலேயர்கள் சில ராம்பூர் நாய்களைத் தங்கள் நாட்டிற்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். தற்போது, சில கிராமங்களில் இவற்றை மக்கள், வீட்டுக் காவல் நாயாக வளர்த்து வருகிறார்கள். அதற்கேற்ற வகையில் நாய்களைப் பழக்கி இருக்கிறார்கள். எனினும் எப்போதாவது காட்டில் வேட்டையாடி, பிரச்னையில் சிக்கிக் கொள்கிறது. நாய்களுக்கான போட்டிகள், கண்காட்சிகள் என, சிலவற்றில் ராம்பூர் நாய்கள் பங்கு கொள்கின்றன. 2005இல் இந்திய நாய்களைச் சிறப்பிக்க தபால்தலை வெளியிடப்பட்டது. ராம்பூர் வேட்டை நாய்க்கும் தபால்தலை வெளியானது. தற்போது, இதை வளர்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், சில ஆண்டுகளில் அழிந்துவிடுமோ என்ற அச்சமும் நாய் ஆர்வலர்களிடம் உள்ளது.உதவிய நூல்கள்: The dictionary of world dogs, The book of Indian dogs by S. Theodore Baskaran