சிறப்பான மசாலா பொடிகள்
சென்னை அண்ணா நகரில், ஆட்டிச நிலையாளர்களும், அவர்களது பெற்றோர்களும் சேர்ந்து மசாலா பொடி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்துகின்றனர். ஸ்பைஸ் (S.P.I.C.E - - Sankalp Parents Initiative Community Enterprise) எனப் பெயரிடப்பட்ட இந்நிறுவனத்தில் சாம்பார் பொடி, ரசப்பொடி, கறிவேப்பிலைப் பொடி, கோதுமை மாவு போன்றவை தயாரிக்கப்படுகின்றன. அதே பகுதியில் இயங்கிவரும் சங்கல்ப் சிறப்பு பள்ளியில் பயிலும் ஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து, பள்ளியின் வழிகாட்டுதலோடு, இந்த நிறுவனத்தை தொடங்கி உள்ளனர். பொதுவாகவே, ஆட்டிசம் போன்ற சிறப்பு நிலைக் குழந்தைகளை, 18 வயது பூர்த்தியாகிவிட்டால், அதன் பின் அவர்களை பள்ளிக்கோ, கல்லூரிக்கோ எளிதாக அனுப்பிவிட முடியாது. சிறப்புக் கவனம் தேவைப்படும் அவர்களை வீட்டுக்குள்ளேயே முடக்கி, அடைத்து வைக்கவும் முடியாது. இதற்காகவே சிறப்புக் கவனம் தேவைப்படும் இக்குழந்தைகளுக்காக தொழிற்கல்வி வகுப்புகள் மருத்துவர்களாலும், சிறப்பு ஆசிரியர்களாலும் பரிந்துரைக்கப்படுகிறது. தொழிற்கல்வியில் இவர்களுக்கு பேப்பர் கப், பேப்பர் தட்டுகள் செய்வது, காகிதங்களில் பை, கவர் செய்வது, பேஷன் நகைகள் செய்வது, தானியங்களை பேக்கிங் செய்வது போன்ற பணிகளைக் கற்றுக்கொடுப்பதோடு, அக்குழந்தைகளின் பெற்றோர் கூட்டாக இணைந்து தொழில் தொடங்கவும் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் அக்குழந்தைகளின் நேரத்தை பயனுள்ளதாக்கி, ஓரளவு வருமானம் ஈட்டவும் தயார் செய்ய முடியும். இந்த ஸ்பைஸ் நிறுவனத்தில் குழந்தைகளோடு சேர்ந்து அவர்களது பெற்றோரும் தயாரிப்பு மற்றும் பொட்டலங்கள் உருவாக்கும் பணிகளில் ஈடுபடுகின்றனர். பொடிகளின் தயாரிப்பு முறைகளையும் இக்குழந்தைகளின் தாய்மார்களே உருவாக்கியிருப்பதாக பெருமையுடன் சொல்கிறார் இதன் நிர்வாகியான திருமதி பிரேமா.உணவு தயாரிப்புக்கான தரக்கட்டுப்பாடு ஆணையத்தின் (Food Safety and Standards Authority of India -- FSSAI) அங்கீகாரம் பெற்றுள்ள இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் நேரடி விற்பனை, கடைகளுக்கு அனுப்புவது போன்ற எல்லா வழிகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன.பெற்றோர்களின் இது போன்ற முயற்சிகள் பாராட்டப் படவேண்டியவையே என்றாலும், சமூகமும் இக்குழந்தைகளின் எதிர்காலத்துக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதே இத்துறை நிபுணர்களின் எதிர்பார்ப்பாகும். இதன் மூலம் சிறப்புக் குழந்தைகள் தங்கள் எதிர்காலத்தை யாரையும் சார்ந்திருக்காது அமைத்துக் கொள்ள முடியும்.