அணில் சரணாலயம்!
மிருகக்காட்சி சாலை, பறவைகள் சரணாலயம் போன்ற இடங்களுக்குப் போவது என்றாலே நமக்கு ஜாலிதான். விலங்குகள், பறவைகள் என எல்லாவற்றையும் ஒரே இடத்தில் பார்க்கலாம். மிருகக்காட்சி சாலைகளிலேயே நாம் அணில்களையும் பார்த்திருப்போம். ஆனால், அணில்களுக்கென்று ஒரு சரணாலயம் தமிழ்நாட்டில் இருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 'ஸ்ரீவில்லிப்புத்தூர் சாம்பல் நிற அணில் வனவிலங்கு சரணாலயம்'தான் அது! மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள செண்பகத்தோப்பு வனப்பகுதியில் 480 சதுர கிலோ மீட்டர் பரப்பில் இந்தச் சரணாலயம் உள்ளது. சரணாலயத்தின் மேற்கில் கேரளத்தின் பெரியாறு புலிகள் காப்பகமும், வடமேற்கில் மேகமலை காப்புக்காடும், கிழக்கில் சிவகிரி காப்புக்காடும் சூழ்ந்துள்ளன.சாம்பல்நிற அணில்களை 'நரை அணில்' (Grizzled Squirrel) என்று சொல்கிறார்கள். இந்த அணில்கள் சாம்பல் நிற முதுகுப் பகுதி, இளஞ்சிவப்பு மூக்கு, அடர்த்தியான முடியுடன் கூடிய நீண்ட வால் என பார்க்க மிகவும் அழகாக இருக்கும். பாலூட்டி இனத்தைச் சேர்ந்த இவை மரத்திற்கு மரம் தாவிச் செல்லும். சாம்பல் நிற அணில்கள் மலை அடிவாரங்களில் உள்ள காடுகளில் உள்ள புளிய மரங்கள் மீது ஓணான் கொடிகளைக் கொண்டும், காய்ந்த குச்சிகளைக் கொண்டும் கூடு கட்டி வாழ்கின்றன. இவை பொதுவாக மரங்களின் உச்சியிலே வாசம் செய்யும். மிக அரிதாகவே தரைக்கு வரும். அழிந்துவரும் உயிரினங்களில் ஒன்றான இவற்றைப் பாதுகாக்கும் நோக்கத்தில் இந்த அழகிய சரணலாயம் 1989-ல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் சரணாலயத்தில் நரை அணில்கள் மட்டுமல்ல; புலி, சிறுத்தை, வேங்கைப்புலி, புள்ளி மான், சிங்கவால் குரங்கு, லாங்கூர், சோலைமந்தி, கருமந்தி, வெள்ளை மந்தி, தேவாங்கு, கரடி, பறக்கும் அணில் ஆகியவையும் உள்ளன. அநேக விலங்குகளை இந்த இடத்தில் பார்க்க முடிந்தாலும், இந்தச் சரணாலயம் சாம்பல் நிற அணிலுக்கே பெயர் பெற்றது.நரை அணில் (Grizzled Squirrel)வாழ்நாள் 14 ஆண்டுகள்நீளம் 2.5 அடிஒரே தாவலில் தாண்டும் தூரம் 20 அடி