விண்வெளியின் முதல் மனிதர்!
யூரி ககாரின் 9.3.1934 - 27.3. 1968குளூஷினோ, ரஷ்யாவிண்வெளிக்குப் பயணம் சென்ற முதல் மனிதர்! விண்கலத்தில் பூமியை ஒரு முறை வலம் வந்து, 1.48 மணி நேரம் விண்வெளியில் பறந்தார். அங்கே பறந்த உணர்வை 'வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தது போல இருந்தது' என்று கூறினார் யூரி ககாரின்.ககாரின் சிறுவனாக இருந்தபோதே, விமானங்களை ஆர்வத்துடன் ரசிக்கத் தொடங்கினார். தானும் இதுபோல பறக்க வேண்டும் என்பதை வாழ்நாள் கனவாகக் கொண்டார். உயர் தொழிநுட்பக் கல்லூரியில் சேர்ந்து, விமான ஓட்டுநராகப் பகுதி நேரப் பயிற்சி பெற்றார். பின்னர், விமான ஓட்டுநர் பள்ளியில் இணைந்து, போர் விமான ஓட்டுநராகவும் தேர்ந்தார். 1960இல் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப சோவியத் யூனியன் திட்டமிட்டது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட இருபது பேர்களில் யூரி ககாரினும் ஒருவர். 1961ஆம் ஆண்டு, ஏப்ரல் 12இல் வாஸ்டாக் 1 (Vostok 1) விண்கலத்தில் பயணித்து, மனிதகுலத்தின் சாதனை நாயகன் ஆனார்! பல தெருக்களுக்கு யூரி ககாரினின் பெயரைச் சூட்டி ரஷ்யா பெருமைப்படுத்தியது. அவர் விண்வெளியில் பறந்த தினத்தை 'சர்வதேச விண்வெளி வீரர்கள் தினம்' (International Day of Human Space Flight) ஆகக் கொண்டாட ஐ.நா.சபை தீர்மானம் நிறைவேற்றியது. யூரி ககாரின், எண்ணற்ற விமானிகளுக்கு விண்கலப் பயணப் பயிற்சிகளை வழங்கினார். விமான விபத்தில் இந்த உலகை விட்டுப் பிரிந்த ககாரின், பூமி இருக்கும்வரை ஒரு சாதனை மனிதராக மக்கள் மனத்தில் அழியாப் புகழுடன் வாழ்வார்.