உள்ளூர் செய்திகள்

உலகிலேயே அதிக மாசடைந்த நகரங்கள்!

2018ஆம் ஆண்டிற்கான உலகின் மிக மாசுபட்ட நகரங்களின் பட்டியலை, ஐ.க்யூ.ஏர் விஷுவல் (IQAir Visual) மற்றும் கிரீன்பீஸ் (Greenpeace Southeast Asia) ஆகிய அரசு சாரா அமைப்புகள் வெளியிட்டுள்ளன. இதில் முதல் 20 இடங்களில் 15 இடங்களை இந்திய நகரங்கள் பிடித்துள்ளன என்பது வருந்தத்தக்க செய்தி.அதிலும் குறிப்பாக, தேசிய தலைநகர் மண்டலங்களில் (National Capital Region - NCR) உள்ள ஆறு நகரங்கள் (குருகிராம், காசியாபாத், பரிதாபாத், பிவாடி, டில்லி, நொய்டா) இந்தப் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன. காற்றில் மிதக்கும் நுண்துகள்களின் அளவு பி.எம். 2.5 (PM 2.5) என்ற அடிப்படையில் அளவிடப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் (WHO) பரிந்துரைத்த 10μg/m3 அளவைவிட 13 மடங்கு அதிகமாக, குருகிராமில் 135.8 μg / m3 என பதிவாகியுள்ளது. பி.எம். 2.5 அளவு அதிகரித்தால், இதய, சுவாச நோய்களும் புற்றுநோயும் அதிகமாகப் பரவும் அபாயம் உள்ளது.கடந்த ஆண்டு இதேபோன்ற மாசடைந்த நகரங்களின் பட்டியல் வெளியானது. அதில் முதல் 20 இடங்களில் 18 இடங்களை இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேச நகரங்களே இடம்பிடித்திருந்தன. தற்போது, ஆய்வுசெய்த 3,000 நகரங்களில் 64 சதவீத நகரங்கள், உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரை அளவைக் காட்டிலும் அதிக நுண்துகள் அளவைக் கொண்டிருந்ததாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. தெற்கு ஆசியாவில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 99 சதவீத நகரங்களில் அபாய அளவில் நுண் துகள்களைக் காற்றில் கொண்டுள்ளன. எனவே, உலகின் மாசடைந்த பிராந்தியம் என தெற்காசியப் பகுதியைக் கருதுவதாகவும் அவ்வறிக்கை கூறுகிறது. முந்தைய ஆண்டு அறிக்கையோடு ஒப்பிட்டால், சீனாவில் இந்த நுண்துகள் குறைப்பில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக மாசுபாட்டு ஆய்வு குறிப்பிடுகிறது. முழுமையாகத் தூய்மை அடையவில்லை என்றாலும் மாசு அளவு குறைந்துள்ளது. இதனால், அபாயகரமான நகரப் பட்டியலில் பீஜிங் 122வது இடத்திற்கு நகர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !