இளம் விஞ்ஞானி கீதாஞ்சலி
அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 11 வயது சிறுமியான கீதாஞ்சலி ராவ் 2017ம் ஆண்டுக்கான சிறந்த இளம் விஞ்ஞானியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தண்ணீரில் காரீயம் (lead) கலந்திருப்பதைக் கண்டறிய அவர் உருவாக்கியுள்ள புதிய கருவியான டெத்ஸிற்காக (Tethys) இந்த விருதை அவர் வென்றிருக்கிறார்.அமெரிக்காவிலுள்ள 5 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டியை, 3எம் நிறுவனம் நடத்தியது. தினசரி பிரச்னைகளுக்கான அறிவியல்பூர்வமான தீர்வுகளை மாணவர்கள் இப்போட்டியில் முன்வைக்க வேண்டும். 25,000 அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகையும், அமெரிக்காவின் சிறந்த இளம் விஞ்ஞானி எனும் விருதும் கொண்டது இப்போட்டி.இதில், நீரில் கலந்துள்ள காரீயத்தின் அளவைக் கண்டறிந்து, புளூடூத் மூலம் கைபேசிக்குத் தகவல் அனுப்பக்கூடிய கீதாஞ்சலியின் கருவிக்கு, முதற்பரிசு கிடைத்துள்ளது. “டெத்ஸ் என்பது, தூய நீருக்கான கிரேக்க தேவதையின் பெயர். இந்தப் பரிசுத் தொகையைக் கொண்டு எனது கருவியை மேம்படுத்தி வீடுகளில் எளிதில் உபயோகிக்கும் வண்ணம் வடிவமைக்க உள்ளேன்” என்று தெரிவிக்கிறார் இளம் விஞ்ஞானியான கீதாஞ்சலி. மருத்துவத் துறையில் ஆய்வுகளை மேற்கொண்டு, வலியிலிருந்து மனிதர்களைக் காக்கும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதே தனது லட்சியம் என்றும் கீதாஞ்சலி தெரிவித்திருக்கிறார்.