உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / தலையங்கம் / உயிர் காக்கும் மருந்துகள் தரமாக இருப்பது அவசியம்!

உயிர் காக்கும் மருந்துகள் தரமாக இருப்பது அவசியம்!

மத்திய பிரதேச மாநிலத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில், சளி மற்றும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த, 20க்கும் மேற்பட்ட குழந்தைகள், சிறுநீரக செயலிழப்பு காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்ததும், ராஜஸ்தான் மாநிலத்தின் சிகார் மாவட்டத்தில், இதேபோல மூன்று குழந்தைகள் பலியானதும், நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அத்துடன், இறந்த குழந்தைகளின் சிறுநீரகத்தில் இருந்த திசுக்களை பரிசோதனைக்கு உட்படுத்தியதில், 'கோல்ட்ரிப், நெக்ஸ்ட்ரா' என்ற இருமல் மருந்துகளை குடித்ததே குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணம் என, தெரியவந்தது. குழந்தைகள் உயிரிழக்க காரணமாக இருந்த இரண்டு இருமல் மருந்துகளில் ஒன்றான, 'கோல்ட்ரிப்' மருந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த, 'ஸ்ரீசன் பார்மா' என்ற நிறுவனத்தில் தயாரானதும், 'நெக்ஸ்ட்ரா' மருந்து குஜராத் மாநிலத்தில் உள்ள நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஸ்ரீசன் நிறுவனத்தின் உரிமையாளர், ம.பி., மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இருமல் மருந்தை தயாரித்த நிறுவனங்களின் கவனக்குறைவும், அந்த நிறுவனங்களின் தயாரிப்புகளை பரிசோதித்து தரத்தை உறுதி செய்ய வேண்டிய, தமிழக உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பினரின் மெத்தனமுமே, பல குழந்தைகள் உயிரிழக்க காரணமாகியுள்ளது. கோல்ட்ரிப் மருந்தை தயாரித்த, ஸ்ரீசன் பார்மா நிறுவனம், 2011ல் உரிமம் பெற்று செயல்பட்டு வந்துள்ளது. ஆனாலும், குறைவான உள்கட்டமைப்பு வசதிகளுடன், தேசிய மருந்து பாதுகாப்பு விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த அந்த நிறுவனத்தை, தமிழக அரசில் உள்ள சம்பந்தப்பட்ட துறையினர் கண்டு கொள்ளாமல் இருந்து உள்ளனர். அது மட்டுமின்றி, 'தமிழகத்தில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் முறையாக சோதனை நடக்கவில்லை' என, சி.ஏ.ஜி., எனப்படும், இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் தன் அறிக்கையில் எச்சரித்தும், அதை தமிழக அரசு கண்டு கொள்ளாமல் இருந்ததும் வியப்பாக உள்ளது. நம் நாட்டில், தமிழகம் மற்றும் குஜராத் மாநிலங்களில் தான் அதிக அளவில் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் தயாரிக்கப்படும் மருந்துகள், பல மாநிலங்களுக்கு மட்டுமின்றி, பல நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. கடந்த, 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில், இதுபோன்ற கலப்பட இருமல் மருந்துகளை குடித்த, 12 குழந்தைகள் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் இறந்தன. அதுமட்டுமின்றி, சில வெளிநாடுகளிலும், இருமல் மருந்துகளை குடித்த குழந்தைகள் உயிரிழந்தன. இதையடுத்து, உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தும், அது நம் நாட்டில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது வருத்தத்திற்கு உரியது. கொரோனா தொற்று விஸ்வரூபம் எடுத்து, 2020 - 21ம் ஆண்டுகளில், உலக நாடுகளில் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்திய போது, இந்திய மருந்து நிறுவனங்கள் தான், தடுப்பூசிகளை தயாரித்து, வெளிநாடுகளுக்கு வழங்கின. அது, மத்திய அரசுக்கும், நம் நாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கும் பெருமை தருவதாக அமைந்தது. அந்த பெருமையை சீர்குலைக்கும் வகையில், சமீபத்திய குழந்தைகள் இறப்புகள் நிகழ்ந்துள்ளன. மேலும், நம் நாட்டில் செயல்படும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் பல, முறைப்படி பதிவு செய்யாமலும், உரிமம் பெறாமலும் இயங்குவதாக கூறப்படுகிறது. இந்த விஷயத்தில், சம்பந்தப்பட்ட துறையினர் இனியாவது உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும். உரிமம் பெறாமல், உரிய பாதுகாப்பு விதிகளை பின்பற்றாமல் செயல்படும் மருந்து நிறுவனங்களை இழுத்து மூட வேண்டும். அதுமட்டுமின்றி, மத்திய - மாநில மருந்து கட்டுப்பாட்டு பிரிவினர், மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் அடிக்கடி சோதனை செய்து, அவற்றின் தயாரிப்பின் தரத்தை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும். உயிர்களை காக்கும், நோய்களை தீர்க்கும் மருந்துகள் தயாரிப்பில் எந்த நிலையிலும் குளறுபடிகள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது, மத்திய - மாநில அரசுகளின் பொறுப்பாகும். அதை மீறுவோரை தண்டிக்கவும் தயங்கக் கூடாது. அதற்கேற்ற வகையில், விதிகளை கடுமையாக்கினாலும் நல்லதே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

உ.பி
அக் 14, 2025 01:46

இந்தியா பூரா தமிழ்நாட்டு மானம் போச்சு..தமிழகத்தை தலைகுனிய வைத்த மாடல்


Nandakumar Naidu.
அக் 13, 2025 17:52

போலி மருந்துகளையும், கலப்பட மருந்துகளையும் மற்றும் உணவில் கலப்படம் செய்பவர்களையும் தூக்கில் போட வேண்டும். தூக்கு தண்டனைத் தவிர வேறு தண்டனை இல்லை என்று அறிவிக்க வேண்டும். அதுவும் வாழ்த்துக்களை ஆறு மாதத்தில் முடிக்க வேண்டும். மறுபரிசீலனை இல்லை என்று அறிவிக்க வேண்டும். பிறகு பாருங்கள் ஒருத்தன் தவறு செய்கிறானா என்று.


Naseer Naseer
அக் 13, 2025 17:34

porampokugal


சாமானியன்
அக் 13, 2025 16:37

மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் தரக்கட்டுப்பாட்டை அலட்சியம் செய்யக்கூடாது. மூலப்பொருட்களின் தரத்தினை ஒவ்வொரு முறையும் 100% தரம் உறுதி செய்யப்பட வேண்டும். எந்த நாள் தரம் செய்யப்பட்டது, என்று ஆலையிலிருந்து அனுப்பப்பட்டது என்ற விபரங்கள் (BATCH NO ) பதிவு செய்யப்பட வேண்டும். மூலப்பொருள் தரம் அல்லது இருமல் மருந்தின் பார்முலா தவறோ என்ற சந்தேகமும் பொதுமக்கட்கு வருகின்றது. மற்ற நிறுவனங்களின் அலொபதி இருமல் மருந்தும் இப்படித்தான் இருக்குமோ என்ற பயத்தில் மருத்துவர்கள் தற்போது எதையுமே பரிந்துரைப்பதில்லை என்று டைம்ஸ் நாளிதழ் செய்தி வந்துள்ளது.


Venugopal S
அக் 13, 2025 15:44

இந்த விஷயத்தில் தமிழகத்தைச் சார்ந்த அந்த மருந்து தயாரிக்கும் நிறுவனம் மீதும் தமிழக அரசின் மீதும் குற்றம் சுமத்தும் சங்கிகள் சம்பந்தப்பட்ட மற்றொரு குஜராத்தை சார்ந்த நிறுவனம் மற்றும் குஜராத் மாநில அரசு மீது குற்றம் சுமத்தாததற்கு அரசியல் மட்டுமே காரணம்!


ஆரூர் ரங்
அக் 13, 2025 19:45

இனிமே நம்பர் ஒன் முன்னேறிய மாடல் மாநிலம்ன்னு பேசினால் சிரிப்பார்கள் எந்த சாதாரண குஜராத்தியும் தமிழனை இழிவாகப் பேசுவதில்லை. ஆனால் இங்குள்ள திராவிஷ பதர்கள் அவர்களை வந்தேறி வடக்கன், கைநாட்டுன்னு கேவலமா பேசுகிறார்கள். நம்மிடமுள்ள தவறுகளை சரிசெய்ய மறுத்து மற்றவர்களை குறைகூறக்கூடாது.


baala
அக் 13, 2025 12:26

லஞ்சம் வாங்கும் மனித மிருகங்கள் இருக்கும்போது எப்படி சாத்தியம்.


ஆரூர் ரங்
அக் 13, 2025 09:32

ஆக மொத்தம் விடியலின் உறக்கத்தால் தமிழக தயாரிப்பு மருந்துகளை இங்குள்ளவர்கள் கூட வாங்கத் தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


ஆரூர் ரங்
அக் 13, 2025 09:30

தரம் என்பது தயாரிப்பின் முடிவில் ஆய்வு செய்து உறுதிப்படுத்துவது மட்டுமல்ல. மூலப் பொருட்கள்.பேக்கிங் அனைத்தின் தரமும் முன்கூட்டியே உறுதிப்படுத்தபட்டதா என்பதில்தான் உள்ளது. லைசென்ஸ் அளிக்கும் துறை இதற்குப் பொறுப்பல்ல. மாநில அரசு திடீர் சோதனை மூலம் அச்சத்தை ஏற்படுத்தி அமல்படுத்த வேண்டியுள்ளது. தயாரிப்பாளர்களின் மனசாட்சிதான் முக்கியம்.


karuththuraja
அக் 13, 2025 06:43

இதை 15 ஆகஸ்ட் 1947 இருந்து சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள் என்ன நடவடிக்கை, இது இன்னும் 1000 ஆண்டு ஆனாலும் அரசாங்கத்தால் முடியாது... எவன் வீட்டிலும் இழவு விழுந்தாலும் சுடுகாட்டுக்கு வியாபாரம் தானே.


Mani . V
அக் 13, 2025 05:29

நிச்சயமாக அதுக்குதான் தமிழ்நாட்டில் அப்பா கூட்டம் டாஸ்மாக் பானத்தைத் தரமாக வழங்க அல்லும் பகலும் உழையோ உழை என்று உழைக்கிறார்கள்.


முக்கிய வீடியோ