சிங்கப்பூரில் புத்தக வெளியீட்டு விழா
'லிட்டில் இந்தியாவும் சிங்கப்பூர் இந்திய சமுதாயமும்' என்ற புத்தகம் சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தில் வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தை சௌந்திர நாயகி வயிரவன் எழுதியுள்ளார். 187 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தை லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மரபுடைமை சங்கம் வெளியிட்டது. இதில் சிங்கப்பூரின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜார்ஜியோ கலந்து கொண்டு சிறப்பித்தார். சிங்கப்பூருக்கான இந்திய தூதர் டாக்டர் ஷில்பக் அம்புலேயும் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தார். இவர்களோடு பல சமூகத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த புத்தகத்தில் லிட்டில் இந்தியா உருவான கதையிலிருந்து அது மக்களுக்கு எவ்வாறு சேவையாற்றுகின்றது, அங்கு அமையப்பட்டுள்ள கோயில்கள், கலைக்கூடங்கள், இப்பொழுது லிட்டில் இந்தியா பகுதியில் வியாபாரம் தொடங்கி செயல்படுவது போன்ற பல அம்சங்களை உளளடக்கியுள்ளது இந்த புத்தகம். பல வண்ண புகைப்படங்களோடு மக்களை கவரும் வண்ணம் பல செய்திகள் உள்ளடக்கிய கலைக்களஞ்சியமாக திகழ்கின்றது. 'இது போன்ற வரலாற்றுப் புத்தகங்கள்வெளியீட்டால் இளம் தலைமுறையினர், அவர்கள் மூதாதையர் நடந்து வந்த பாதையைப் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும் என்பதற்காக இந்த புத்தகத்தை எழுதினேன். மேலும் லிட்டில் இந்தியா பகுதியில் பல அம்சங்கள் நிறைந்திருக்கின்றன. அவற்றை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த புத்தகம் எழுதப்பட்டு வெளியீடு கண்டுள்ளது' என்று சௌந்தரநாயகி வைரவன் கூறினார். முன்னாள் அமைச்சர் ஜார்ஜியோ அவரது உரையில், சௌந்தரநாயகி மிக நுணுக்கமாக லிட்டில் இந்தியா பற்றி பல அம்சங்களை உள்ளடக்கியதாக இந்த புத்தகத்தை அழகாக எழுதியுள்ளார். அவருக்கு என்னுடைய பாராட்டுக்கள் என்று தெரிவித்தார். -- தினமலர் வாசகி செளந்திரநாயகி வைரவன்