உள்ளூர் செய்திகள்

சிங்கப்பூர் எழுத்தாளர் மில்லத் இயக்கும் இந்தியாவின் முதல் ஏ.ஐ., ஆவணத் திரைப்படம்

ஜீசிக்ஸ் மூவிஸ் சார்பில் சிங்கப்பூர் ஜீனத் பர்வீன் இணை தயாரிப்பில் உலகச் சாதனை எழுத்தாளர் மில்லத் அகமது திரைக்கதை, வசனம், பாடல்கள், இணை கேமரா, தயாரிப்பு, இயக்கத்தில் உருவாகியுள்ள ஆவணத் திரைப்படம் 'மீலாதுன் நபி'. இது முழுக்க முழுக்க முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கூறும் படம். இதில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் நடிகர்கள் இல்லாமல் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.அக்டோபர் 10ஆம் தேதி மீலாதுன் நபி திரையிட பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. படம் குறித்து தயாரிப்பாளரும், இயக்குநருமான மில்லத் அகமது கூறியதாவது:-திருக்குர்ஆன், ஹதிஸ் ஆகியவற்றின் ஆதாரத்துடன் இப்படம் உருவாக்கப்பட்டது. பள்ளி மாணாக்கர்கள், இளையர்கள், நபிகளின் வாழ்க்கையைப் பற்றி அறிய விரும்பும் ஆர்வலர்கள் அனைவரும் அவசியம் காண வேண்டிய பையோபிக் படம். இஸ்லாமிய தாய்குலங்கள் திரையரங்கிற்கு வந்து படம் பார்ப்பது மிகவும் அரிது. ஆனால் இந்த மீலாதுன் நபியை அவர்கள் குடும்பத்தோடு திரையரங்கிற்கு வந்து படம் பார்க்கும் வண்ணம் தயாரித்துள்ளோம்.இப்படத்தின் கதை மூன்று கோணங்களில் சொல்லப்படுகிறது. ஏஐ கதாபாத்திரங்கள் மூலமும், சென்னையில் புகழ்பெற்ற இமாம்கள் மூலமும், பத்து பாடல்கள் மூலமும் கதை நகர்கிறது. இதிலுள்ள பாடல்களை நாகூர் ஹனிபா மகன் நெளஷாத் ஹனிபா, ஜென்டில்மேன் சம்சுதீன், யூடியூப் புகழ் ரஹீமா பேகம், விஜய் சூப்பர் சிங்கர் பரிதா பாடியுள்ளனர்.கமர்சியல் இசை இல்லாமல் ஒரே ஒரு இசைக்கருவியை வைத்து பக்தி பரவசமூட்டும் வகையில் எஸ்.ஆர். ராம் இசையமைத்துள்ளார். லலித் ராகவேந்தரும், மில்லத் அகமதும் ஒளிப்பதிவு செய்துள்ளனர். எடிட்டிங் லலித் ராகவேந்தர் உட்பட படத்தின் ஒட்டுமொத்த படக்குழுவினரின் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் படம் எதிர்பார்ப்பை தாண்டிலும் சிறப்பாக தயாராகி உள்ளது என்று கூறினார்.--- சிங்கப்பூரில் இருந்து நமது செய்தியாளர் வெ. புருஷோத்தமன் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்