சிங்கப்பூர் ஸ்ரீ சிவ கிருஷ்ணா ஆலயத்தில் முருகன் திருக்கல்யாண உற்சவம்
கந்த சஷ்டிப் பெரு விழாவின் முத்திரைத் திருவிழாவான சூர சம்ஹாரம் நடைபெற்ற பின் வெற்றி விழாவாக முருகன் திருக்கல்யாண வைபவம் சிங்கப்பூர் மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணா ஆலயத்தில் மண்டபம்நிறை பக்தர் திருக் கூட்டத்திடை 28.10.2025 - இல் வெகு விமரிசையாக நடைபெற்றது. தலைமை அர்ச்சகர் ஆகம ப்ரவீண சிவஸ்ரீ நாகராஜ சிவாச்சார்யார் தெய்வீகத் திருமணத்தை நடத்தி வைத்து அதன் சிறப்புக்களை விவரித்தார். திருமாங்கல்யம் பக்தர்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டு, தெய்விகத் தம்பதிகள் மாலை மாற்றிக் கொண்ட நிகழ்வு மெய்சிலிர்க்க வைத்தது. முன்னதாக மங்கல மகளிர் வரிசை எடுத்து ஆலயம் வலம் வந்து சமர்ப்பித்தனர். திருமணச் சடங்குகள் பக்தர்களின் “ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா... சக்தி வேல் முருகனுக்கு அரோகரா “ முழக்கத்திடையே கோலாகலமாக நடைபெற்றன. திருமாங்கல்யதாரணம் நடைபெற்ற பின்னர் சர்வ அலங்கார நாயகர்களாக வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ முருகப் பெருமான் ஆலயம் வலம் வந்து அருள்பாலித்தார். நிறைவாக அருட்பிரசாதத்துடன் அறுசுவை அன்னப் பிரசாதமும் வழங்கப்பட்டது. - சிங்கப்பூரிலிருந்து நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்