ஜெய்சல்மீரில் துவங்கிய யோகிபாபுவின் யானை முகத்தான்
ஒரு பக்கம் காமெடி கதாபாத்திரங்களிலும் இன்னொரு பக்கம் அவ்வப்போது கதையின் நாயகனாகவும் நடித்து வரும் யோகிபாபு, தற்போது யானை முகத்தான் என்கிற படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். மலையாள இயக்குனர் ரெஜிஸ் மிதிலா என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஜெய்சல்மீரில் துவங்கி உள்ளது. இந்தப்படத்தில் ஆட்டோ டிரைவராக ரமேஷ் திலக் மற்றும் அவரது வீட்டு ஓனராக ஊர்வசி என இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மலையாளத்தில் ரெஜிஸ் மிதிலா இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான இன்னு முதல் என்கிற படத்தின் ரீமேக்காக இந்தப் படம் உருவாகிறது. யோகிபாபுவே இந்தப்படத்தை விரும்பி ரீமேக் செய்யும்படி அழைப்பு விடுத்தாராம். இந்த படத்தில் யோகிபாபு விநாயகக் கடவுள் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மலையாளத்தில் கிருஷ்ணன் ஆக இருந்த அந்த கதாபாத்திரத்தை தமிழில் விநாயகனாக மாற்றியுள்ளனர்.