புத்தகத்திற்கு பைபிள் பெயர் : கரீனா கபூருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
முன்னணி பாலிவுட் நடிகை கரீனா கபூர். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புத்தகம் ஒன்றை வெளியிட்டார். பெண்களின் கர்ப்பகால பிரச்னைகளைப் பற்றிய இந்த புத்தகத்திற்கு 'பிரகணன்சி பைபிள் ' என்று தலைப்பு வைத்திருந்தார். இதில் அவர் பைபிள் என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்காக கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த புத்தகத்தின் தலைப்பு கிறிஸ்தவர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளது என கூறி வழக்கறிஞர் கிறிஸ்டோபர் ஆண்டனி என்பவர் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அவர் தனது மனுவில், 'பைபிள்' என்ற வார்த்தை மலிவாக பிரபலம் அடையும் நோக்கத்தில் தலைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது ஆட்சேபனைக்குரியது என்றும் தெரிவித்திருந்தார். இதற்காக நடிகை கரீனா கபூர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார் .
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம் இது தொடர்பாக நடிகை கரீனா கபூருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதோடு இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை 1ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டது.