வயநாடு நிலச்சரிவு: ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்த தனுஷ்
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடு, உடமைகள் அனைத்தையும் இழந்துள்ளனர். ஏராளமானோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
தொழிலதிபர்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் முன்னணி திரைபிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி அளித்து வருகின்றனர். அந்த வகையில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நடிகர் தனுஷ் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் தொகையை வழங்கியுள்ளார்.
ஏற்கனவே விக்ரம் ரூ.20 லட்சம், ராஷ்மிகா மந்தனா ரூ.10 லட்சம், சூர்யா, கார்த்தி, ஜோதிகா மூவரும் சேர்ந்து ரூ.50 லட்சம், நயன்தாரா - விக்னேஷ் சிவன் ரூ.20 லட்சம், மோகன்லால் ரூ.25 லட்சம், மம்முட்டி ரூ.20 லட்சம், துல்கர் சல்மான் ரூ.15 லட்சம் நிவாரண நிதியை வழங்கியுள்ளனர்.