'கங்குவா' படத்தின் எடிட்டர் நிஷாத் யூசப் தற்கொலை; படம் வெளியாவதற்குள் சோகம்
மலையாளத்தில்
'தள்ளுமாலா', 'உண்டா', 'ஒன்', 'ஆப்ரேஷன் ஜாவா', 'சாவேர்' உள்ளிட்ட பல்வேறு
படங்களுக்கு எடிட்டராக பணிபுரிந்தவர் நிஷாத் யூசுப் (வயது 43). இதில்
2022ல் தள்ளுமாலா படத்திற்காக கேரள அரசின் சிறந்த எடிட்டருக்கான
விருதினையும் வென்றிருந்தார். தற்போது தயாராகி வரும் மோகன்லால் மற்றும்
மம்முட்டி படங்களுக்கும் எடிட்டராக பணிபுரிந்து வருகிறார்.
அதேபோல்,
தமிழில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து, நவம்பர் 14ல்
வெளியாகவுள்ள 'கங்குவா' படத்திற்கும் எடிட்டராக இருந்துள்ளார். சூர்யா,
அடுத்ததாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிக்கப்போகும் 'சூர்யா 45'
படத்திற்கும் இவர் தான் எடிட்டர். இந்த நிலையில், கொச்சி பனம்பில்லி நகரில்
உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று (அக்.,30) அதிகாலை 2 மணியளவில் இறந்து கிடந்தார். அவரது மரணம் எப்படி நிகழ்ந்தது என்பது தெரியாத நிலையில் தற்போது முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
தற்கொலை
நிஷாத் யூசப், குடும்ப பிரச்னை காரணமாக அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
நிஷாத் யூசப்பின் திடீர் மரணத்தால் மலையாளத் திரையுலகினர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இவர் எடிட்டராக பணிபுரிந்துள்ள பெரிய படம் என்றால் அது 'கங்குவா' தான். அப்படம் வெளியாவதற்கு முன்னதாகவே நிஷாத் யூசுப்புக்கு மரணம் ஏற்பட்டுள்ளது.