உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : ஒரே பாடலில் வாழ்ந்த சிலோன் மனோகர்

பிளாஷ்பேக் : ஒரே பாடலில் வாழ்ந்த சிலோன் மனோகர்

இலங்கை வாழ் தமிழரான சிலோன் மனோகர் இலங்கையில் இருந்து மேல்படிப்புக்காக சென்னை வந்தார். திருச்சியில் படித்துக் கொண்டிருந்த அவர் விடுமுறைகளில் சென்னை வந்து சினிமா வாய்ப்பு தேடினார். அதற்கு காரணம் இன்றைக்கு யோகி பாபுவுக்கு இருப்பது மாதிரியான சிகை அழகு அவருக்கு. படிப்பு முடிந்ததும் சினிமா வாய்ப்பு கிடைக்காததால் மீண்டும் இலங்கை திரும்பினார். அங்கு பாப் இசை பாடல்களை பாடினார். சிங்களம், தமிழ் இரு மொழிகளிலும் பாப் பாடிய அவர் அங்கு பிரபலமானார்.

அவர் பாடிய 'சுராங்கனி... சுராங்கனி...' என்ற பாடல் இலங்கையில் மட்டுமல்லாது உலகம் முழுக்க பரவியது. தமிழ்நாட்டிலும் அந்த பாடல் பிரபலமானது. அந்த பாடலை பாடுவதற்காகவே மீண்டும் தமிழ்நாட்டுக்கு வந்த மனோகருக்கு சினிமா கதவுகள் திறந்தன. வில்லன், காமெடி கேரக்டர்களில் நடித்தார். இசை கச்சேரிகளில் பாடல்களை பாடினார். குறிப்பாக சுராங்கணியை பாடினார். அந்த ஒரு பாடலை பாடுவதற்காகவே அவரை இசை கச்சேரிகளில் பாட அழைத்தார்கள். அந்த ஒரே பாடலை ஒரே நாளில் 4 கச்சேரிகளில் பாடிவிட்டு வருவார்.

சினிமா வருமானத்தை விட சுராங்கணி வருமானம்தான் அவருக்கு பெரிதாக இருந்தது. ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்புகள் நின்று போனாலும் அவருக்கு கை கொடுத்தது சுராங்கணி பாடல்தான். வயது முதிர்ச்சி காரணமாக அவர் உடல் நிலை பாதிக்கப்படும் வரை சுராங்கணியை பாடிக்கொண்டே இருந்தார்.

மரணிப்பதற்கு சில நாட்கள் வரை அவர் மருத்துவமனையிலும் சுராங்கணி பாடலை பாடிக்கொண்டே இருந்ததாக சொல்வார்கள். 2018ம் ஆண்டு தனது 74வது வயதில் சிறுநீரக செயலிழப்பால் காலமானார். ஒரே பாடலால் புகழ்பெற்று அந்த பாடலைக் கொண்டே கடைசி வரை வாழ்ந்த கலைஞர் சிலோன் மனோகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !