தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென்
மலையாள சினிமாவின் முன்னணி நடிகையான அன்னா பென் 'கொட்டுக்காளி' படத்தின் மூலம் அறிமுகமானார். இதில் அவருக்கு பாராட்டுகளும், பல விருதுகளும் கிடைத்தது. இந்த நிலையில் அடுத்து அவர் இன்னும் பெயரிடப்படாத படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடிக்கிறார்.
இந்த படத்தை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனமான நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 'நாய் சேகர்' படத்தை இயக்கியவரும், கோமாளி, கைதி, விஐபி ', இமைக்கா நொடிகள், கீ உள்ளிட்ட படங்களில் நடித்தவருமான கிஷோர் ராஜ்குமார் இயக்கி, நாயகனாக நடிக்கிறார்.
படம் பற்றி அவர் கூறும்போது “காதலும் நகைச்சுவையும் நிரம்பிய கதை இது. 'பீல் குட்' உணர்வைத் தரும் வகையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை உருவாக்க உந்து சக்தியாக இருந்தவர் கே.பாக்யராஜ் சார். அவர் இயக்கிய படங்கள் போல இன்றைய காலகட்டத்தில் படங்கள் வருவதில்லையே என்ற குறையை இந்தப் படம் போக்கும். ஜோடி பொருத்தம் பற்றி பேசும் இந்த கலகலப்பான படம் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இருக்கும். திறமையான நடிகையான அன்னா பென் உடன் இணைவதில் மிகவும் மகிழ்ச்சி” என்றார்.