‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்!
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள ‛பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களையும் இணைத்து வருகிற அக்டோபர் 31ம் தேதி ‛பாகுபலி தி எபிக்' படத்தை வெளியிடப் போகிறார்கள். ஐந்து மொழிகளில் ஐமேக்சில் இப்படம் வெளியாகிறது.
இந்நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் ராஜமவுலி வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், ‛‛இந்த பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களுக்காகவும் மொத்தம் 11 மணி நேரம் காட்சிகளை படமாக்கினேன். ஆனால் இரண்டு பாகுபலி படத்தின் பாகங்களுக்கு போக மீதமுள்ள பல மணி நேர காட்சிகள் எடிட் செய்யப்பட்டது. அதில் எனக்கு பிடித்தமான பல காட்சிகள் உள்ளன. ஆனால் இப்போது இந்த பாகுபலி தி எபிக் படத்தில் முந்தைய இரண்டு பாகங்களிலும் இடம் பெற்ற முக்கிய காட்சிகள் தவிர பல காட்சிகள் கத்தரிக்கப்பட்டு, இடம்பெறாத பல முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகள் இணைக்கப்பட உள்ளன. அதனால் இந்த பாகுபலி தி எபிக் படம் ரசிகர்களுக்கு ஒரு புதிய படத்தை பார்த்த அனுபவத்தையே கொடுக்கும்'' என்று அவர் தெரிவித்திருக்கிறார்.