'கருடன்' ரீமேக் தோல்வி ஏன் ? நாயகன் விளக்கம்
துரை செந்தில்குமார் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் 'கருடன்'. இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்று 50 கோடி வரை வசூலித்தது. படத்தைத் தெலுங்கில் 'பைரவம்' என்ற பெயரில் ரீமேக் செய்து இந்த வருடம் வெளியிட்டனர். பெல்லம்கொன்டா சாய் சீனிவாஸ், மஞ்சு மனோஜ், நர ரோகித், அதிதி ஷங்கர் மற்றும் பலர் நடித்தனர். ஆனால், படம் தெலுங்கில் தோல்வியைத் தழுவியது.
அதுகுறித்து படத்தின் நாயகன் சாய் சீனிவாஸ் சமீபத்திய பேட்டி ஒன்றில், “பைரவம் கதை என்னை பெரிதும் உற்சாகப்படுத்தியது. ஆனால், அது ஒரு ரீமேக் படம் என ஊடகங்கள் ஒவ்வொரு கட்டுரையிலும் அதை ரீமேக், ரீமேக் என்று குறிப்பிட்டன. அதை அவர்கள் தவறு என்று சொல்ல மாட்டேன். பைரவம் ஒரு ரீமேக் என்பது உண்மை, அதனால் பார்வையாளர்களை டிக்கெட் வாங்கும் அளவுக்கு உற்சாகப்படுத்த முடியவில்லை.
இப்படத்தில் கையெழுத்திடும்போது, இங்குள்ள பலர் 'கருடன்' படத்தைப் பார்த்திருக்க மாட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால், என் கணிப்பு முற்றிலும் தவறாகிவிட்டது. இருந்தாலும் 'பைரவம்' என்னை ஒரு நடிகனாக நிரூபிக்க வாய்ப்பளித்தது. கிராமப்புற பின்னணியில் ஒரு மாஸ் கதாபாத்திரத்தைத் திறம்பட செய்ய முடியும் என்பதைக் காட்டியது,” என்று தெரிவித்துள்ளார்.
சாய் சீனிவாஸ், அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள 'கிஷ்கிந்தாபுரி' படம் இந்த வாரம் செப்டம்பர் 12ம் தேதி வெளியாகிறது.