செக் மோசடி வழக்கிலிருந்து ராம்கோபால் வர்மாவை விடுவித்த நீதிமன்றம்
பிரபல பாலிவுட் இயக்குனரான ராம்கோபால் வர்மா ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து அதிரடியான சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்தார். சமீப வருடங்களாக படங்களை இயக்குவதை குறைத்துக் கொண்டாலும் சர்ச்சையான விஷயங்களை பேசி எப்போதுமே லைம் லைட்டில் தொடர்ந்து இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2018ல் அவர் தனது பட நிறுவனத்திற்காக சுமார் 2 லட்சத்து 38 ஆயிரம் மதிப்புள்ள ஹார்ட் டிஸ்க்குகளை வாங்கிய வகையில் அதற்காக கொடுக்கப்பட்ட காசோலை வங்கியில் பணம் இல்லை என திரும்பி வந்தது. இதனை தொடர்ந்து ராம் கோபால் வர்மா மீது ஹார்ட் டிஸ்க் நிறுவனத்தார் செக் மோசடி வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 90 ஆயிரம் தொகை அதிகமாக சேர்த்து 3 லட்சத்து 72 ஆயிரம் தொகையை மூன்று மாதங்களுக்குள் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என ராம்கோபால் வர்மாவுக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில் ராம்கோபால் வர்மா தங்கள் இருவருக்குள்ளும் இந்த விஷயத்தை பேசி முடித்து செட்டில் செய்து கொண்டதாகவும், அதனால் தனது மனுவை வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும் கூறினார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கிலிருந்து ராம்கோபால் வர்மாவை நீதிமன்றம் விடுவித்துள்ளது.