தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ஆரவ்
'பிக் பாஸ்' டைட்டில் வென்றதன் மூலம் புகழ்பெற்றவர் ஆரவ். அதன் பிறகு சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ், கலகதலைவன், மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன், ராஜபீமா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால் அவரால் ஒரு முன்னணி ஹீரோவாக முடியவில்லை. கடைசியாக அஜித்துடன் 'விடாமுயற்சி' படத்தில் நடித்தார்.
இந்த நிலையில் அவர் ஆரவ் ஸ்டூடியோ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது கடந்த பல ஆண்டுகளாக மக்கள் அளித்த அன்பும் அங்கீகாரமும், எனக்கு பெரும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் வழங்கியதோடு, இந்த அழகான திரைப்பட உலகின் ஒரு பகுதியாகவும் மாற்றியுள்ளது.
இப்போது அந்த பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நோக்கில், ஆரவ் ஸ்டூடியோ தொடங்கி உள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். விஷுவல் மற்றும் கிரியேட்டிவ் உலகில், இதுவரை சொல்லப்படாத இயல்பான கதைகளை உருவாக்கும் நோக்குடன், இந்த நிறுவனம் உருவாகியுள்ளது. கடவுளின் அருளும், திரைப்பட ரசிகர்களின் அன்பும் துணையாக, இதயங்களைத் தொடும் சிறந்த படங்களை தொடர்ந்து உருவாக்கும் நம்பிக்கையுடன், நன்றியுடன், எங்களின் இந்த சினிமா பயணத்தை பெருமையுடன் தொடங்குகிறோம் என்கிறார்.