நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம்
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் சிவகுமார். 1965ம் ஆண்டில் ‛காக்கும் கரங்கள்' படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதன்பின் குணச்சித்ரம், ஹீரோ என நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிப்பை விட்டு ஒதுங்கியிருந்தாலும் சினிமா தொடர்பான நிகழ்வு, சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இவரது மகன்களான சூர்யா, கார்த்தி தமிழில் முன்னணி நடிகர்களாக உள்ளனர்.
கலைத்துறையில் சிவகுமாரின் சேவையை பாராட்டி தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் பல்கலைக் கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சென்னை, கலைவாணர் அரங்கில் நடந்த இந்த விழாவில் அவருக்கு இந்த பட்டத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
டாக்டர் பட்டம் பெற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவகுமார், ‛‛ஓவியர், நடிகர், சொற்பொழிவாளர் போன்ற தகுதிகளின் அடிப்படையில் தான் இந்த விருதை(பட்டம்) எனக்கு கொடுத்திருப்பதாக நினைக்கிறேன். இதை வாங்கியதில் எனக்கு பெருமை'' என்றார்.
சிவகுமார் நடிகர் என்பதை தாண்டி சிறந்த ஓவியர் மற்றும் சொற்பொழிவாளர். கம்பராமாயணம், மகாபாரதம், திருக்குறள் ஆகியவற்றை மேடைகளில் சொற்பொழிவாக ஆற்றினார்.