தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன்
கார்த்தி நடிப்பில் மெய்யழகன் படத்திற்கு பிறகு வருகிற 12-ஆம் தேதி திரைக்கு வரும் படம் வா வாத்தியார். நலன் குமாரசாமி இயக்கி உள்ள இந்த படத்தில் கார்த்தியுடன் கிர்த்தி ஷெட்டி, சத்யராஜ் , ராஜ்கிரண், ஆனந்தராஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து உள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் புரமோசன் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் வினியோகஸ்தர் சக்திவேலன், நடிகர் சூர்யா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு செய்த ஒரு உதவி குறித்து நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், கார்த்திக் சார் நடித்த 27 படங்களில் 15 படங்களை நான் விநியோகம் செய்துள்ளேன். என்னுடைய கேரியரில் அவரது படங்கள் திருப்பு முனையை கொடுத்தன. கார்த்திக் சாரை பொறுத்தவரை சின்ன விஷயங்களை கூட மெனக்கெட்டு செய்வார். தந்தை சிவகுமாரை போலவே சிரத்தை எடுத்து நடிப்பார். அந்த வகையில் இந்த படத்தில் எம்ஜிஆரை வைத்து பண்ணியுள்ள இந்த படத்தில் நிறையவே எபோர்ட் போட்டுள்ளார்.
ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா ஒரு சமயம் மிகப் பெரிய அளவில் நெருக்கடியில் இருந்தார் . அப்போது சூர்யா அவரை அழைத்து அந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு ஒரு மிகப்பெரிய உதவியை அவருக்கு செய்தார். அவர் அப்படி சொன்னதும் ஞானவேல் ராஜா பெரிய அளவில் எமோஷனல் ஆகிவிட்டார். வன்மம் நிறைந்த இந்த உலகில் சூர்யா அண்ணாவைப் போல ஹீரோக்கள் கிடைப்பது அரிதான விஷயம். அந்த வகையில், எம்ஜிஆருக்கு பிறகு மற்றவர்கள் பிரச்னைகளில் இருக்கும் போது உதவி செய்யக்கூடிய ஒரு ஹீரோ என்றால் அது சூர்யா ஒருவர் மேட்டுமே என்று பேசினார்.