வெறுப்புணர்வு உங்களை குருடாக்கியது: ஏ.ஆர்.ரஹ்மான் மீது கங்கனா பகீர் குற்றச்சாட்டு
விக்கி கவுசல் நடிப்பில் ஹிந்தியில் உருவான 'ச்சாவா' என்ற வரலாற்றுப் படம் கடந்தாண்டு வெளியாகி 600 கோடிக்கு மேல் வசூலித்தது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படம் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், ''ச்சாவா பிரிவினையை உருவாக்கும் படம். மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தி லாபம் ஈட்டுவதாக எனக்குத் தோன்றுகிறது. இருப்பினும், அதன் மையக் கருத்து வீரத்தைக் கொண்டாடுவது என்பதால் அப்படத்திற்கு இசையமைத்தேன்'' எனப் பேசியிருந்தார்.
இது பாலிவுட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்வினையாற்றிய நடிகையும், பா.ஜ., எம்.பி.,யுமான கங்கனா ரனாவத், ரஹ்மானை வெறுப்புணர்வுள்ளவர் என்றும் பதிவிட்டுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கங்கனா பகிர்ந்துள்ள பதிவு:
அன்புள்ள ஏ.ஆர். ரஹ்மான், நான் ஒரு காவிப் (Saffron) பற்றாளராக இருப்பதால், இந்தத் திரையுலகில் நான் பல பாரபட்சங்களையும் ஓரவஞ்சனையையும் எதிர்கொள்கிறேன். இருந்தபோதிலும், உங்களை விட அதிக பாரபட்சமும் வெறுப்பும் கொண்ட ஒரு மனிதரை நான் பார்த்ததில்லை என்று சொல்லியே ஆக வேண்டும்.
எனது இயக்கத்தில் உருவான 'எமர்ஜென்சி' திரைப்படத்தைப் பற்றி உங்களிடம் விவரிக்க நான் மிகவும் ஆசைப்பட்டேன். கதையை விவரிப்பதை விடுங்கள், என்னைச் சந்திக்கக்கூட நீங்கள் மறுத்துவிட்டீர்கள். நீங்கள் ஒரு 'புரொப்பகண்டா' (Propaganda - ஒரு குறிப்பிட்ட கருத்தைப் பரப்புவதற்கான படம்) படத்தில் இடம்பெற விரும்பவில்லை என்று என்னிடம் சொல்லப்பட்டது.
முரண்பாடு என்னவென்றால், எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட இந்தப் படம் சமநிலையானது மற்றும் இரக்கமுள்ள அணுகுமுறை கொண்டது எனப் பாராட்டியுள்ளனர்; அனைவரும் இந்தப் படத்தை ஒரு சிறந்த படைப்பு என்கிறார்கள். ஆனால் உங்களது வெறுப்புணர்வு உங்களை குருடாக்கியுள்ளது. எனப் பதிவிட்டுள்ளார்.
கங்கனா ரணாவத் கடைசியாக நடித்த 'எமர்ஜென்சி' படத்தை அவரே இயக்கி, தயாரித்து வெளியிட்டார். 1975 முதல் 1977 வரை 21 மாதங்கள் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட அவசரநிலைக் (எமர்ஜென்சி) காலத்தையும், அப்போதைய பிரதமர் இந்திராவின் வாழ்க்கையையும் மையமாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டது.