கலைஞராக இருப்பதே மகிழ்ச்சியை தருகிறது: ஸ்ருதிஹாசன்
நடிகை ஸ்ருதிஹாசன், தற்போது 'ஆகாசம்லோ ஒக தாரா' எனும் தெலுங்கு படத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக நடித்து வருகிறார். சாதினேனி இயக்கியுள்ளார். சமீபத்தில் ஸ்ருதிஹாசனின் 40வது பிறந்தநாளையொட்டி வெளியான இப்பட போஸ்டரில் ஸ்ருதிஹாசன் சிகரெட் பிடிப்பது போன்று வெளியானது சர்ச்சையானது.
இந்த நிலையில் ஸ்ருதிஹாசன் அளித்த பேட்டி ஒன்றில், ''பாட்டு, இசை, எழுத்து, நடிப்பு என பல துறைகளில் நான் சென்று கொண்டிருக்கிறேன். கலைகளில் பல்வேறு திறமை கொண்ட பெற்றோருடன் வளர்ந்ததே இதற்கு காரணம். நான் வளர்ந்த சூழல் எனக்கு அதை கொடுத்துள்ளது.
2018ல் நடிப்பிலிருந்து சில காலம் இடைவெளி எடுத்துக் கொண்டேன். அந்த இடைவெளியில் நான் யார் என்பதை மறுமதிப்பீடு செய்தேன், என்னை நானே ஆராய்வதற்கான நேரமாக அதை எடுத்துக்கொண்டேன். நான் பல ஆண்டுகளாகக் கடுமையான பதற்றத்தால் அவதிப்பட்டேன். அந்த பதற்றத்துடன் அன்றாட நடவடிக்கைகளை என்னால் தொடர முடியவில்லை. நான் எதைத் தேடுகிறேன், நான் யார் என்பதில் எனக்குத் தெளிவில்லாமல் இருந்தேன்.
அப்போது அந்த இடைவெளியில், லண்டனில் இருந்தேன். அங்கு இசையின் மூலம் என்னை நான் மீண்டும் கண்டறிந்தேன். தினமும் என் உடைகளை நானே துவைப்பது, எனக்கான உணவை நானே சமைப்பது, மெட்ரோ ரயிலில் பயணிப்பது, திரும்பி வந்து புதிதாக எழுதப் பயிற்சி செய்வது, பின்னர் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அந்த இசையைச் சோதித்துப் பார்ப்பது என என் வாழ்க்கையை அமைத்திருந்தேன்.
இப்போது ஒரு கலைஞராக இருப்பதை மிகவும் விரும்புகிறேன். அது மகிழ்ச்சியைத் தருகிறது. வழக்கமான கதாபாத்திரங்களை விடுத்து சவாலான வேடங்களில் நடிக்கவும் ஆர்வமாக இருக்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.