தமிழ் சினிமா : மீண்டும் மலையாள நடிகையரின் தாக்கம்
தமிழ் சினிமாவில் அந்தக் காலம் தொட்டு, இந்தக் காலம் வரை மலையாள நடிகைகள் நமது ரசிகர்களின் மனதில் ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்துவிடுவார்கள்.
பத்மினி, கேஆர் விஜயா என ஆரம்பமான மலையாள நடிகையரின் வருகை, அம்பிகா, ராதா, ரேவதி, ஷோபனா, ஊர்வசி, நதியா, அசின், நயன்தாரா என தொடர்ந்தது. அவர்கள் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட காலத்திலோ அல்லது நீண்ட காலத்திலோ மிகவும் பிரபலமாகவும், சில பல வெற்றிப் படங்களில் நடித்தவர்களாகவும் இருந்தார்கள். நயன்தாரா 20 வருடங்களைக் கடந்தும் தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கிறார்.
அவர்கள் மட்டுமல்லாது சில படங்களில் நடித்தாலும், அமலா பால், மஞ்சு வாரியர், பார்வதி, ஐஸ்வர்ய லெட்சுமி, அனுபமா பரமேஸ்வரன், நிகிலா விமல், ரஜிஷா விஜயன், அபர்ணா பாலமுரளி, லிஜோமோல் ஜோஸ், அன்னா பென், மகிமா நம்பியார், கல்யாணி பிரியதர்ஷன் என இன்னும் சிலரை பட்டியலில் சேர்க்கலாம்.
அவர்களது வரிசையில் அடுத்த தலைமுறை நடிகையர் இப்போது வந்துள்ளார்கள். ஜிவி பிரகாஷ்குமார் நடித்த 'ரெபெல்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானாலும், 'டியூட்' படத்தின் மூலம் பரபரப்பாகப் பேசப்பட்டார் மமிதா பைஜு. அவர் நடித்த மலையாளப் படமான 'பிரேமலு' படமே அவரை தமிழ் ரசிகர்களைக் கவர ஆரம்பித்தது.
நாளை வெளியாக உள்ள 'வித் லவ்' படம் மூலம் அனஸ்வரா ராஜன் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பார் என படம் பார்த்தவர்கள் பாராட்டி வருகிறார்கள். த்ரிஷா முதன்மைக் கதாநாயகியாக நடித்த 'ராங்கி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானாலும், அடுத்து 'தக்ஸ்' படத்தில் நடித்தாலும் கண்டுகொள்ளப்படாத ஒருவராக இருந்தார் அனஸ்வரா. 'வித் லவ்' படத்தின் மூலம் 2 கே கிட்ஸ்களிடம் 'லவ்'வைப் பெற்றுவிடுவார் என்கிறார்கள்.