'பராசக்தி'யை ஓடிடி வெளியீட்டை தடுக்க கோர்ட் மறுப்பு
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன் அதர்வா நடித்த 'பராசக்தி' படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. இந்த படத்தின் கதை நான் எழுதிய கதை என்று இணை இயக்குனர் வருண் ராஜேந்திரன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பு தரப்பில் அளிக்கப்பட்ட மனுவில் “கடந்த 1965ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம், ஒரு வரலாற்று நிகழ்வு. வரலாற்றுச் சம்பவங்கள் அல்லது சமூகப் போராட்டங்கள் மீது எந்த தனிநபரும் காப்புரிமையோ அல்லது தனியுரிமையோ கோர முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் கதைக்களம் வேண்டுமானால் போராட்டக் காலத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கலாம், ஆனால் கதாபாத்திரங்கள், வசனங்கள் மற்றும் திரைக்கதை முற்றிலும் கற்பனையானவை மற்றும் தனித்துவமானவை என்றும் தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
இதை தொடர்ந்து மனுதாரர் கேட்டிருந்தபடி ஓடிடி வெளியீட்டுக்கு தடைவிதிக்க மறுத்த நீதி மன்றம், வழக்கு விசாரணையை வருகிற 9ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. இதனால் படம் ஜி5 தளத்தில் இன்று வெளியாகி உள்ளது.