பிளாஷ்பேக்: ஆர் எம் வீரப்பனால் இயக்குநர் என்ற இலக்கை எட்டிப்பிடித்த ஏ ஜகந்நாதன்
“ஜுபிடர் பிக்சர்ஸ்” தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு உதவி இயக்குநராக கலைப்பணியை ஆரம்பித்து, பின் எம் ஜி ஆரின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான இயக்குநர் பா நீலகண்டன் மற்றும் இயக்குநர் டி பிரகாஷ் ராவ் ஆகியோரிடம் துணை, இணை இயக்குநராக பல படங்களில் பணிபுரிந்து, ஒரு இயக்குநருக்கான அத்தனை தகுதியும், திறமையும் உடையவராக இருந்த இயக்குநர் ஏ ஜகந்நாதன் அவர்களின் முதல் பட வாய்ப்பு கிடைத்த அனுபவமும், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, படத்தை வெற்றிப் படமாக்கிய பின்னணியைப் பற்றிய பதிவுதான் இது.
“ரிக்ஷாக்காரன்” திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான மத்திய அரசு வழங்கிய “பாரத்” விருதினைப் பெற டில்லி சென்று சென்னை திரும்பிய எம் ஜி ஆருக்கு, சத்யா ஸ்டூடியோவில் பெரிய வரவேற்புக்கான விழா எடுத்திருந்தனர். பலரும் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விழாவிற்கு கையில் மாலையுடன் சென்ற ஏ ஜகந்நாதன், எம் ஜி ஆர் வந்திறங்கியவுடன் மாலையை அவர் கழுத்தில் அணிவிக்க, அடுத்த நொடியே அந்த மாலையை அவர் கழுத்தில் அணிவித்து, நீ சீக்கிரம் இயக்குநர் ஆகவேண்டும் என வாழ்த்தியும் இருக்கின்றார் எம் ஜி ஆர். எம் ஜி ஆரின் வாக்குப்படி, அதற்கான ஒரு நல் வாய்ப்பும் இயக்குநர் ஏ ஜகந்நாதனைத் தேடி வந்தது.
எம் ஜி ஆரின் “நேற்று இன்று நாளை” திரைப்படத்தில் உதவி இயக்குநராக அப்போது பணிபுரிந்து கொண்டிருந்த ஏ ஜகந்நாதனிடம், சத்யா மூவீஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அதிபரான ஆர் எம் வீரப்பன், சிறிய பட்ஜெட்டில் ஒரு படம் எடுக்கலாம் என்றிருக்கின்றேன். அதை நானே இயக்கலாம் என்ற யோசனையும் இருக்கிறது. “காவல்காரன்”, “கண்ணன் என் காதலன்” போன்ற நமது கம்பெனி திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்திருக்கும் நீங்கள், நான் எடுக்கப் போகும் இந்த சிறிய பட்ஜெட் திரைப்படத்திலும் உதவி இயக்குநராகப் பணியாற்றுவீர்களா? என கேட்டிருக்கின்றார்.
இயக்குநர் ஏ ஜகந்நாதனும் அவரிடம் வருவதாக ஒப்புக் கொண்டதோடு, தான் தற்போது பணிபுரிந்து கொண்டிருக்கும் “நேற்று இன்று நாளை” திரைப்படத்தின் படப்பிடிப்பு நாட்களில் மட்டும் அங்கே சென்றுவிடுவதாக ஆர் எம் வீரப்பனிடம் கூறியதோடு, சார் படத்தை நீங்களே இயக்குவதாக முடிவு செய்துவிட்டீர்களா? என கேட்க, இப்படியும், அப்படியுமாக இருக்கிறது என ஒரு உறுதியற்ற பதிலை தந்திருக்கின்றார் ஆர் எம் வீரப்பன்.
தொடர்ந்து ஆர் எம் வீரப்பனிடம் 'ஒருவேளை உங்கள் முடிவில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டு, படத்திற்கு வேறொரு இயக்குநரை நியமிப்பதாக இருந்தால் அந்த வாய்ப்பை எனக்கு கொடுங்கள் சார், நான் வாழ்நாள் முழுக்க உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பேன்' எனக் கூற, சிரித்துக் கொண்டே பதில் ஏதும் கூறாமல் அங்கிருந்து சென்றிருக்கின்றார் ஆர் எம் வீரப்பன். சில நாள்களுக்குப் பின் அந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பை ஜெகந்நாதனுக்கே வழங்கினார் ஆர் எம் வீரப்பன். அந்த திரைப்படம்தான் அவரது முதல் திரைப்படமான “மணிப்பயல்”. 1973ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வந்த இத்திரைப்படத்தை, சென்னை மிட்லண்ட் திரையரங்கில், புரொஜக்டரை இயக்கி முதல் காட்சியை தொடங்கி வைத்தவர் மக்கள் திலகம் எம் ஜி ஆர்.