அறிமுகப்படுத்திய குருநாதரை திருமணத்திற்கு அழைக்காமல் தவிர்த்த ராஷ்மிகா மந்தனா
நடிகை ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டா திருமணம் நேற்று இனிதே நடைபெற்றது. கடந்த ஏழு வருடங்களில் 'நேஷனல் கிரஷ்' என அனைவராலும் அழைக்கப்படும் அளவிற்கு ராஷ்மிகா மந்தனாவின் திரையுலக வளர்ச்சி அவரை முன்னணி நடிகையாக மாற்றியது. அதே சமயம் அவரை முதன்முதலாக கன்னட திரை உலகில் நடிகையாக அறிமுகப்படுத்தியது இயக்குனரும் நடிகருமான காந்தாரா புகழ் ரிஷப் ஷெட்டி தான். ஆனால் தனது குருநாதரை ராஷ்மிகா மந்தனா தனது திருமணத்திற்கு அழைக்கவில்லை என்பதுதான் அதிர்ச்சி தரும் தகவல். சமீபத்தில் மந்த்ராலயத்தில் உள்ள ராகவேந்திரா சாமி கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த ரிஷப் ஷெட்டியிடம் ராஷ்மிகாவின் திருமணம் குறித்து கேட்டதற்கு அவர் எந்த வித ரியாக்சனும் காட்டாமல் பதில் சொல்லாமல் நகர்ந்து விட்டார்.
ரிஷப் ஷெட்டி இயக்கிய கிரிக் பார்ட்டி படத்தில் ராஷ்மிகா நடித்த போது அதில் ஹீரோவாக நடித்த ரக்சித் ஷெட்டியுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. அதன் பிறகு அது திருமண நிச்சயதார்த்தம் வரை சென்றது. அந்த சமயத்தில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் தெலுங்கு திரையுலகில் ராஷ்மிகாவுக்கு மிகப்பெரிய கதவை திறந்து விட்டதால் சில காரணங்களுக்காக ராஷ்மிகா தங்களது திருமண நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொண்டு படங்களை நடிப்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
அதன்பிறகு கன்னட படங்களில் நடிப்பதையும் தவிர்க்க ஆரம்பித்தார். இப்போது வரை வேறு எந்த கன்னட படத்திலும் அவர் நடிக்கவில்லை. பொதுவாக எந்த ஒரு ஹீரோவோ, அல்லது ஹீரோயினோ தங்களை அறிமுகப்படுத்திய இயக்குனரை தங்களது திருமண நிகழ்வுகளில் தந்தை அல்லது அண்ணன் ஸ்தானத்தில் நிற்கவைத்து மரியாதை செலுத்துவதை பல நிகழ்வுகளில் பார்த்திருக்கிறோம். ஆனால் தனது குருநாதர் என்றாலும் கூட தனது முன்னாள் காதலரான ரக்சித் ஷெட்டியின் நெருங்கிய நண்பர் என்பதால், ரிஷப் ஷெட்டியை கூட தனது திருமணத்திற்கு அவர் அழைக்கவில்லை என்றே சொல்லப்படுகிறது.