உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 8 வார இடைவெளியில் ஓடிடி: தென்னிந்திய தியேட்டர் சங்கம் அதிரடி முடிவு

8 வார இடைவெளியில் ஓடிடி: தென்னிந்திய தியேட்டர் சங்கம் அதிரடி முடிவு


தியேட்டர்களில் வெளியாகும் புதிய படங்கள் அடுத்த நான்கு வாரங்களில் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன. அதனால், தியேட்டர்களுக்கு மக்கள் வருவது குறைந்துவிட்டது, தியேட்டர் வசூல் பாதிக்கப்படுகிறது என கடந்த சில வருடங்களாகவே தியேட்டர் சங்கத்தினர் குரல் கொடுத்து வந்தனர்.

சமீபத்தில் தெலுங்குத் திரையுலகத்தில் 4 வார இடைவெளி என்பதை 8 வாரங்களாக மாற்ற வேண்டும் என தியேட்டர் சங்கத்தினர் ஆலோசித்தனர். அதைத் தொடர்ந்து நேற்று மார்ச் 11ம் தேதி பெங்களூருவில் தென்னிந்திய தியேட்டர் சங்கத்தினர் கூடி ஆலோசனை செய்தனர். அதன் முடிவில் ஏப்ரல் 10 முதல் ஓடிடியில் வெளியாவதற்கான இடைவெளியை 8 வாரங்கள் என்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.

தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் வெளியாகும் படங்களுக்கு இது பொருந்தும். 2021 முதல் ஓடிடி தளங்களின் வருகை காரணமாக தியேட்டர்கள் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். ஹிந்தியில் 8 வார இடைவெளி என்பது கட்டாயமாக இருப்பதைப் போல தென்னிந்தியத் திரையுலகத்திலும் ஏற்படுத்த வேண்டும். அதைத் தயாரிப்பாளர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.


தென்னிந்திய அளவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதால் தயாரிப்பாளர்கள் அதை பின்பற்றியாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி பின்பற்றாத தயாரிப்பாளர்களுக்கு தியேட்டர்களைத் தருவதை அவர்கள் நிறுத்தவும் வாய்ப்புள்ளது. தயாரிப்பாளர்கள் எடுக்கும் முடிவுகளைப் பொறுத்து இது அமையும்.

ஒரு வேளை இது நடந்தால் புதிய படங்களுக்கான விலையை ஓடிடி நிறுவனங்கள் கடுமையாகக் குறைக்கும் நிலை உருவாகும். அதனால், தயாரிப்பாளர்களுக்கு நிறைய இழப்பு ஏற்படும். தியேட்டர்கள் சங்கத்தினர் தென்னிந்திய அளவில் பேசியதைப் போல தயாரிப்பாளர்களும் கூடிப் பேசுவார்களா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !