2018ம் ஆண்டில் அருண்ராஜா காமராஜ் இயக்கிய கனா என்ற படத்தை முதன்முதலாக தனது எஸ்.கே புரொடக்சன்ஸ் மூலம் தயாரித்த சிவகார்த்திகேயன் தொடர்ந்து டாக்டர், டான் , கொட்டுக்காளி , தாய்க்கிழவி என ஒன்பது படங்களை தயாரித்தவர் அடுத்து தனது பத்தாவது படத்தை அம்மா முத்து சூர்யா என்ற புதுமுக இயக்குனரை வைத்து தயாரிப்பதாக தாய் கிழவி படத்தின் வெற்றி விழாவில் அறிவித்தார்.
இந்த மேடையில் சிவகார்த்திகேயன் பேசும்போது, எனது குடும்பத்தின் வரவு செலவு கணக்கு அனைத்தையும் எனது மனைவி ஆர்த்திதான் கவனித்து வருகிறார். வங்கி கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்று கூட எனக்கு தெரியாது. செலவுக்கு பணம் தேவைப்படும்போது மட்டுமே ஆர்த்தியிடம் கேட்டு வாங்குவேன். அதோடு அவர் வரவு செலவு கணக்குகளை சிறப்பாக பார்க்கக் கூடியவர். அவரால்தான் நான் தயாரிப்பாளராகவும் மாறினேன். எஸ்.கே புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கும் படங்களின் வரவு செலவு கணக்குகள் அனைத்தையும் அவரே பார்க்கிறார். அதனால்தான் என்னால் தொடர்ந்து படங்களை தயாரிக்க முடிகிறது என்றும் மனைவி குறித்து அந்த மேடையில் பெருமையாக பேசினார் சிவகார்த்திகேயன்.