பிளாஷ்பேக் : சிறுவனாக சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த கமல்
1962ம் ஆண்டு வெளியான படம் 'பாத காணிக்கை'. உறவுகளுக்குள் ஏற்படும் சிக்கலும் அதற்கு காரணமான ஈகோ, பணம் இரண்டையும் வைத்து அழுத்தமாக உருவான படம். இயக்குநர் கே.சங்கர், எம்.எஸ்.சோலைமலை கதை வசனம் எழுதியிருப்பார். கே.சங்கர் இயக்கினார். கண்ணதாசன் பாடல்கள் எழுத, விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைத்திருந்தார்கள். சரவணா பிலிம்ஸ் ஜி.என்.வேலுமணி தயாரித்தார்.
எஸ்.வி.சுப்பையாவும், எம்.வி.ராஜம்மாவும் பிரமாதமான நடிப்பை வழங்கியிருப்பார்கள். அசோகன் இயல்பான நடிப்பில் அசத்தியிருப்பார். ஜெமினியின் மென்மையான நடிப்பும் சாவித்திரி, விஜயகுமாரியின் பாந்தமான நடிப்பும் மிகச்சிறப்பு. சந்திரபாபுவின் காமெடி ரசிக்க வைத்தது. எம்.ஆர்.ராதா பட்டாளத்து வீராச்சாமி எனும் கேரக்டரில் மிரட்டியிருப்பார். ராணுவத்தில் பணியாற்றிவிட்டு வந்தவர். ஆகவே, படம் முழுக்க, குண்டு காயம்பட்ட கால்களை தூக்கித்தூக்கி நடப்பதும் அவருடைய பாடி லாங்வேஜும் மிரட்டலாக இருக்கும். கே.சங்கரின் மிகச்சிறந்த படங்களில் 'பாத காணிக்கை'க்கு தனியிடம் உண்டு.
களத்தூர் கண்ணம்மாவிற்கு பிறகு குழந்தை நட்சத்திரம் கமல்ஹாசனுக்கு சிறப்பான படமாக அமைந்தது. படத்தின் விளம்பரங்களில் கமல்ஹாசன் படத்திற்கு முக்கியத்தும் கொடுத்து வெளியிட்டார்கள்.
படம் நெடுக, அவர் வரும் காட்சிகளில் எல்லாமே அசத்தியிருப்பார். சி.கே.சரஸ்வதியை நக்கலடிப்பதும், எம்வி.ராஜம்மாவிடம் பாட்டி பாட்டி என உருகுவதும், எம்.ஆர்.ராதா போல் குரல் மாற்றி நடித்துக் காட்டுவதும், கிளைமாக்ஸில், 'தாத்தா சொன்னதையே யாருமே செய்யல' என்று பாட்டியிடம், அப்பாவிடம், சாவித்திரியிடம், விஜயகுமாரியிடம் என்று வரிசையாகாச் சொல்லுவதும் என பிரமாதப்படுத்தியிருப்பார் கமல். களத்தூர் கண்ணம்மாவில் சீரியசான குழந்தைகயாக நடித்த கமல், இதில் ஜாலியான குழுந்தையாக நடித்திருந்தார். அவர் பேசும் வசனங்கள் ரசிகர்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தது.
காதல் என்பது வரை, சொன்னதெல்லாம் நடந்திடுமா சொல்லடி கிளியே, உனது மலர் கொடியிலே எனது மலர் கையிலே , தனியா தவிக்கிற வயசு, அத்தை மகனே போய் வரவா, பூஜைக்கு வந்த மலரே வா, எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன் போன்ற பாடல்கள் படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. முக்கியமாக 'வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?' என்கிற பாடல், காலம் கடந்தும் இன்றைக்கும் காயப்பட்ட மனங்களின் மருந்தெனத் திகழ்கிறது.