அறிவுசார் சொத்து மேலாண்மை நிறுவனத்துடன் எழுத்தாளர் சங்கம் ஒப்பந்தம்
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் புதிய தலைவராகி இருக்கிறார் சேரன். எழுத்தாளர்கள் அடிக்கடி சந்திக்கும் காப்பி ரைட்ஸ் மற்றும் கதை திருட்டு பிரச்னைகளை சட்ட ரீதியாக அணுகவும், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுசார் சொத்து மேலாண்மை மற்றும் சட்ட சேவைகள் பிரிவான 'ஐபி கிளைம்ப்' என்ற அமைப்புடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
இதன் மூலம் எழுத்தாளர்களிடையே அறிவுசார் சொத்துரிமை குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதோடு, அவர்களின் சட்டப் பாதுகாப்பு மற்றும் நீண்டகால உரிமை மேலாண்மையை வலுப்படுத்தும் முக்கிய முயற்சியாக அமைந்துள்ளது.
இது தொடர்பாக நடந்த கலந்துரையாடலில், எழுத்தாளர் சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் கவலைகள் குறித்தும் இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டது. எழுத்தாளர்களின் படைப்புகளைப் பாதுகாப்பதற்கும், படைப்பாளிகள் தங்கள் உரிமைகளை நீண்ட காலத்திற்குப் பாதுகாத்து நிர்வகிக்க உதவும் வழிமுறைகளை வலுப்படுத்துவதற்கும் சாத்தியமான கூட்டுத் தீர்வுகள் குறித்து ஆராயப்பட்டது.
எழுத்தாளர்கள் சங்கத்தின் செயல்பாடுகளை டிஜிட்டல் மயமாக்கி உறுப்பினர்களுக்கான பிரத்யேக இணையதளத்தை உருவாக்குதல் மற்றும் முறையான ஒப்பந்தக் கட்டமைப்பை ஏற்படுத்துதல் ஆகியவை குறித்து கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது. இதன் மூலம் உறுப்பினர்கள் தங்கள் ஆவணங்கள் மற்றும் ஒப்பந்தங்களை எளிதாக நிர்வகிக்க முடிவதோடு நீண்ட காலத்திற்கு அவர்களின் படைப்புகளைப் பாதுகாப்பாகப் பதிவு செய்து, கண்காணித்து நிர்வகிக்கலாம்.
ஐபி கிளைம்ப் மற்றும் எழுத்தாளர்கள் சங்கம் இடையிலான இந்தக் கூட்டு முயற்சி, எழுத்தாளர்களிடையே அறிவுசார் சொத்துரிமைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதையும், நீண்டகாலத்திற்கு அவர்கள் தங்கள் படைப்புகளைப் பாதுகாக்கவும், ஆவணப்படுத்தவும் மற்றும் கண்காணிக்கவும் உதவும் நடைமுறை வழிமுறைகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இக்கூட்டத்தில் இரு அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.