‛பத்தா' படம்... 'மகளே' பாடல் வெளியீடு : அப்பாமகள் பாசம் கதையா?
இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் படம் பத்தா. இயக்குனர் அட்லி படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் முதல் பாடலான மகளே...வை சாய் அபயங்கர் இசையமைத்து, பாடியுள்ளார், கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார். 'மகளே' பாடல் முற்றிலும் மாறுபட்ட மென்மையான மெலடி பாணியில் உருவாகி உள்ளது.
குறிப்பாக 80-களின் இசை உலகை இந்த பாடல் கொண்டு வந்துள்ளது. 'மகளே' பாடலின் வீடியோவும் 80-களின் இசை உலகை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. பழைய கால இசைக்கூடம், அக்கால ரெக்கார்டிங் முறைகள் என அந்தக் காலகட்டத்தின் சூழலை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன.
ஒரு தந்தை தனது மகளைப் பார்த்து அன்புடன் பேசுவது போன்ற உணர்வில் உருவாகியுள்ள இந்தப் பாடல், மகளின் மீதான பாசத்தையும் அன்பையும் அழகாக வெளிப்படுத்துகிறது. “மகளே, மந்திரச் சிமிழே, மங்கள விளக்கே கேளடி” எனத் தொடங்கும் கார்த்திக் நேத்தாவின் வரிகள் கவிதையைப் போல அமைந்துள்ளது. இதனால் பத்தா படம் அப்பா, மகள் பாசத்தை.அடிப்படையாக கொண்ட கதை என தெரிகிறது. அக்டோபர் 1ல் படம் ரிலீஸாகிறது.