உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சின்னத்திரை ஸ்ரீ, வெள்ளித்திரையில் ஹீரோ ஆனார்

சின்னத்திரை ஸ்ரீ, வெள்ளித்திரையில் ஹீரோ ஆனார்

யாரடி நீ மோஹினி தொடர் மூலம் மக்களிடம் பிரபலமானவர் நடிகர் ஸ்ரீ. பல டிவி தொடர்களிலும், சினிமாவில் குணச்சித்ர வேடங்களிலும் நடித்தவர் இப்போது பேராசை என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். 1000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் சங்கர் கணேஷின் மகன் மற்றும் எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றிப் படங்களை தயாரித்த பழம்பெரும் தயாரிப்பாளர் ஜி.எல்.வேலுமணியின் பேரன் ஸ்ரீ ஆவார்.

மதுவினால் ஏற்படும் தீமைகளை சொல்லும் சமூகத்திற்கான படமாகவும், அதே சமயம், அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் வகையிலான கமர்ஷியல் திரைப்படமாகவும் பேராசை உருவாகிறது. ஸ்ரீ-க்கு ஜோடியாக அறிமுக நாயகி தீஷிகா, இரண்டாவது கதாநாயகனாக ராஜா, நடிகை அனுகிருஷ்ணா, நடிகை வெண்பா, டாக்டர் சீனிவாசன், பூ விலங்கு மோகன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஈசன் மூவிஸ் சார்பில் சக்தி அருண் கேசவன், ஷிஹான் சரவணன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். ஈசன் இயக்குகிறார். சங்கர் கணேஷிடம் பல படங்களுக்கு இசை உதவியாளராக பணியாற்றிய வி.ஆர்.ராஜேஷ் என்கிற சுதர்சன் இசையமைக்கிறார்.



இப்படத்தின் படப்பிடிப்பை இன்று(ஜன., 4) கிளாப் அடித்து துவக்கி வைத்தார் சங்கர் கணேஷ். அவர் கூறுகையில், “என் மகன் ஸ்ரீ ஹீரோவாக அறிமுகமாகிறார். இதுவரை சினிமாவில் அவருக்கு நான் எங்கேயும் சிபாரிசு செய்ததில்லை. அவரே தனது சொந்த முயற்சியால் இந்த நிலைக்கு வந்துள்ளார். நான் எங்கு சென்றாலும், ஸ்ரீ-யின் அப்பா இவர், என்று சொல்கிறார்கள். அதை கேட்கும் போது பெருமையாக இருக்கிறது. இந்த படத்தின் மூலம் அவர் சினிமாவிலும் பெரிய பெயர் எடுக்க வேண்டும். பேராசை படக்குழுவினர் அனைவரும் பெரிய வெற்றி பெற வேண்டும், என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !