உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் சேதுபதி பற்றி அன்றே கணித்த கார்த்திக் சுப்பராஜ்

விஜய் சேதுபதி பற்றி அன்றே கணித்த கார்த்திக் சுப்பராஜ்

தமிழ் சினிமாவில் இன்றைய முன்னணி நடிகர்களில் தனது நடிப்பால் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பவர் விஜய் சேதுபதி. தன்னுடைய 43வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு திரையுலகத்தைச் சேர்ந்த பலரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தார்கள். பலருடைய வாழ்த்துகளுக்கு தன்னுடைய நன்றியைப் பகிர்ந்தார் விஜய் சேதுபதி.


டுவிட்டரில் சில ரசிகர்களின் பதிவுகளையும் ரிடுவீட் செய்துள்ளார். பத்து வருடங்களுக்கு முன்பு விஜய் சேதுபதி கதாநாயகனாக அறிமுகமான 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நாள் டிசம்பர் 23, 2010 அன்று இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் பேஸ்புக்கில் இட்ட பதிவை ஒரு ரசிகர் நேற்று டுவீட் செய்ததைத்தான் விஜய் சேதுபதி ரிடுவீட் செய்துள்ளார்.

கார்த்திக் சுப்பராஜின் அந்த பேஸ்புக் பதிவில், “தென்மேற்கு பருவக்காற்று' நாளை வெளியாகிறது. விஜய் சேதுபதியை பெரிய திரையில் பார்க்க மிகவும் ஆர்வமாகவும், உற்சாகமாகவும் காத்திருக்கிறேன், வாழ்த்துகள் விஜய், திரையில் கலக்கவும்” என பதிவிட்டிருக்கிறார். அதற்கு ஒருவர், “யார் விஜய் சேதுபதி ?,” கமெண்ட் பதிவிட, பதிலுக்கு கார்த்திக் சுப்பராஜ், “அவரை விரைவில் தெரிந்து கொள்வீர்கள்” என பதிலளித்துள்ளார்.

'தென்மேற்கு பருவக்காற்று' படம் வெளியாவதற்கு முன்தினமே விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தைப் பிடிப்பார் என்பதை கார்த்திக் சுப்பராஜ் கணித்திருக்கிறார்.

கார்த்திக் சுப்பராஜின் முதல் படமான 'பீட்சா' படத்தின் கதாநாயகன் விஜய் சேதுபதிதான். அப்படம் இருவருக்குமே பெரிய திருப்புமுனையைக் கொடுத்தது. அதன்பின் இருவரும் “இறைவி, பேட்ட” ஆகிய படங்களிலும்
இணைந்துள்ளனர். இருவரும் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு குறும்படங்களில் இணைந்து பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
விஜய் சேதுபதி மட்டுமல்ல, கார்த்திக் சுப்பராஜும் இன்றைய ரசிகர்களின் மனதில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !